மின்னல் வேகத்தில் நிவாரண பணிகள்: ஜெயலலிதா
கடலூர்:
சுனாமி அலைகள் வருவது பற்றி இந்திய விமான முன்னாள் அதிகாரி கொடுத்த எச்சரிக்கை தமிழக அரசுக்குக் கிடைத்திருந்தால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை இன்று கடலூரில் முதல்வர் ஜெயலலிதாதொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வேட்டி, ஒரு சேலை, 2 போர்வை, 60 கிலோ அரிசி, 3 லிட்டர்மண்ணெண்ணெய், பாத்திரங்கள் வாங்க ரூ.2,000, குடிசைகள் கட்ட ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 நிவாரண நிதி வழங்கப்படும் எனஜெயலலிதா நேற்று முன் தினம் அறிவித்தார்.
இன்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலூர் சென்ற ஜெயலலிதா அங்கு சுப்பராயலு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 800 பேருக்கு ரூ.10.25 கோடி மதிப்பிற்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, 60 சதவீத மீட்பு பணிகள் மாநில அரசின் நிதியிலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.சுனாமி அலைகளின் பாதிப்பு குறித்த முழு விவர அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
3 கட்டமாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.இந்த பணிகள் முடிவடைந்தன.
2-வது கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். இது முழு வீச்சில் நடந்து வருகிறது.
3-வது கட்டமாக வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு நிரந்தர மறுவாழ்வு அளிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு முதல் கட்ட வேலைகளை முடித்து, இரண்டாம் கட்ட வேலைகளில் இறங்கிவிட்டது. ஆனால்இந்தோனேஷியா, இலங்கை, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்னும் முதல் கட்ட பணிகளான உடல்கள் மீட்பே முடிவடையவில்லை.
சுனாமி அலை வருவது பற்றி முன்னாள் இந்திய விமான படை அதிகாரி ஒருவர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். தவறுதலாகஇந்தத் தகவலை முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு இந்தத் தகவலை அனுப்பிவிட்டார்.
இந்தத் தகவல்களை தமிழக அரசுக்கு உரிய நேரத்தில் தெரிவித்திருந்தால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிரிழப்புக்களைத்தவிர்த்திருக்கலாம். இந்தக் கொடூரத்தால் பெற்றோரை இழந்து அனாதைகளாகிவிட்ட குழந்தைகளின் கல்வியை மாநில அரசு நிச்சயம் உறுதிசெய்யும் என்றார் ஜெயலலிதா.
கடலூரில் சுமார் 30 நிமிடம் இருந்த ஜெயலலிதா பின்னர் நாகப்பட்டினத்திற்குப் புறப்பட்டார். அங்கு ராஜா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். நாகப்பட்டிணத்தில் மேலும் ஒரு இடத்துக்குச் செல்ல இருந்த ஜெயலலிதா,மீண்டும் சுனாமி அலைத் தாக்குதல் வரலாம் என்ற செய்தி வந்ததால் அத் திட்டத்தை கைவிட்டுவிட்டுத் திரும்பினார்.
பின்னர் திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்ற ஜெயலலிதா, மதிய உணவை முடித்த பின் நாகர்கோயில் செல்கிறார். அங்குபாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்குகிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.