தமிழகம்-10,000, இலங்கை-23,000, மொத்தம்-84,000 பேர் பலி
ஜகார்த்தா:
கடல் கொந்தளிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 84,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றுதெரிகிறது.
தமிழகத்தில் சுமார் 10,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதியில் குழந்தைகளாவர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் பெரும் கடல் கொந்தளிப்பு உருவானது. இதுஇந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, மலேஷியாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 68,000 ஆக இருந்த மொத்த பலிஎண்ணிக்கை இன்று 84,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவில் மட்டும் 52,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இலங்கையில்:
இலங்கையில் 22,800 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 வெளிநாட்டவர்களும் அடக்கம். மேலும் 4,059 பேரைக் காணவில்லை. 8,815பேர் காயமடைந்துள்ளனர். 600,810 பேர் வீடிழந்தனர்.
93,407 பேர் 763 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருட்களும், நிவாரண நிதியும் முக்கியமாகத்தேவைப்படும் வேளையில், அதிகளவில் வெளிநாட்டு மீட்புக்குழுவினரும் தேவைப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைஅமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புலிகள் கோரிக்கை:
கொழும்பிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின்சார்பில் நிவாரணப் பொருட்கள் லாரிகளிலும் விமானத்திலும் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழர் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு நிதி உதவி வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் உலகநாடுகளுக்கும் உலகெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் பகுதிகளை இலங்கை அரசு மொத்தமாகக் கண்டுகொள்ளாமல் விட்டது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கூட தமிழர் பகுதிகளில் முழுஅளவில் இலங்கை அரசின் நிவாரணப் பணிகள் நடக்கவில்லை. புலிகளே இப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில்:
இந்தியாவில் 13,000க்கும் அதிகமானோர் பலியாகியியுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர்பலியாகியுள்ளனர். அந்தமானில் 3,000 பேர் இறந்துள்ளனர்.
நாகப்பட்டிணம் தான் அதிகபட்சமான உயிர்களை இழந்துள்ளது. இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000. காணாமல் போனவர்கள்3,000 பேர். இதற்கு அடுத்தபடியாக குமரி மாவட்டத்திலும், கடலூரிலும் அதிகமான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தாய்லாந்தில்
தாய்லாந்தில் 1,975 பேர் இறந்ததாகவும், மேலும் 6,043 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. அவர்களில் 80 சதவீதத்தினர் இறந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக அந்நாட்ட பிரதமர் தஸ்கின் சினவத்ரா கூறினார்.அவர் கூறிவது உண்மையானால், அங்கு பலி எண்ணிக்கை 6,800 ஆக உயரும்.
மியான்மரில்:
மியான்மரில் 90 பேரும் மலேஷியாவில் 66 பேரும் பலியானதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலத்தீவில் 10 வெளிநாட்டவர்கள் உட்பட 67 பேர் பலியானதாகவும், மேலும் 69 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் கடல் கொந்தளிப்பினால் படகு கவிழ்ந்து அதில் பயணம் செய்த தந்தையும், குழந்தையும் பலியாகினர்.