சேஷனுக்கு காஞ்சி போலீஸ் சம்மன்!!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு மேலும் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் மாஜிதலைமைத் தேர்தல் அதிகாரி டி.என். சேஷன் பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான கோபால்ஜியிடம், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சங்கரராமன் கொலைவழக்குதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரையும் சேர்த்து இதுவரை 24 பேர் கைதாகியுள்ளனர். விரைவில் இளையவரும் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் மடத்துக்கு அடிக்கடி வந்து போனவர்கள் என்ற முறையிலும் மடத்தைப் பற்றி அக்குவேறாக அறிந்தவர்கள் என்ற வகையிலும்மேலும் 20 பேருக்கு காஞ்சிபுரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதில் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் காட்டு பங்களாவுக்கு வந்து தனிப்படை முன் ஆஜராகுமாறு இவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைதானவுடன் மடத்துக்கு வந்த சேஷன் அங்கேயே சில நாட்கள் முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது அரட்டல்,உருட்டலால் மடத்தில் சிலரே சலிப்படைந்ததும் நினைவுகூறத்தக்கது.
எஸ்.பி.பிரேம்குமாரே பரவாயில்லை போலிருக்கு, இவர் ரோதனை தாங்கலை.. என்று மட ஊழியர்கள் எரிச்சல் காட்டியதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
ஆனால், ஜெயேந்திரர் மீதும் மடத்தின் மீதும் தமிழக அரசு காட்டிய பாய்ச்சலின் தீவிரம் மிகவும் சூடாக இருந்ததால், மெதுவாக அங்கிருந்துநகர்ந்துவிட்டார் சேஷன். இந் நிலையில் இப்போது அவருக்கும் சம்மன் போயிருக்கிறது.
தினமலர் நிர்வாகியிடம் விசாரணை:
இதற்கிடையே தினமலர் பத்திரிக்கை நிர்வாகிகளில் ஒருவரான கோபால்ஜியிடம், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணைநடத்தினர்.
கோபால்ஜியின் அலுவலகம் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியில் உள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் கோபால்ஜியையும்விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து கோபால்ஜி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 1 மணி நேரம்வரை விசாரணை நடத்தப்பட்டது.