சங்கர மட கணக்காளர் கைது
காஞ்சிபுரம்:
சங்கர மட கணக்காளர் காசி விஸ்வநாத அய்யர் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் காசி விஸ்வநாத அய்யர் கைதுசெய்யப்பட்டார். அவரையும் சேர்த்து தற்போது 25 பேர் உள்ளே சென்றுள்ளனர்.
காசி விஸ்வநாத அய்யர் சங்கர மடத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த திங்கள்கிழமை 2 முறை விசாரணைநடத்தப்பட்டது. நேற்றும் விசாரணைக்கு வருமாறு அவர் கோரப்பட்டிருந்தார்.
நேற்று பிற்பகல் முதல் அவரிடம் காட்டுப்பங்களாவில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரவு வரை நீடித்த விசாரணைக்குப்பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மடத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக காசி விஸ்வநாதஅய்யர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் புகாரை சங்கர மட வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக மட வழக்கறிஞர் ரேவதி கூறுகையில்,
இது பொய்யான புகார். அரசுத் தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு காசி விஸ்வநாத அய்யர் வற்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால்அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால்தான் சங்கர மட வழக்குகளை திருத்தி மோசடி செய்ததாக அவர் மீது பொய்யான புகாரை சுமத்திகைது செய்துள்ளனர் என்றார்.
கைது செய்யப்பட்ட காசி விஸ்வநாத அய்யர் நேற்று இரவு காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விஸ்வநாதன் அய்யர் மீது 420 (மோசடி), 465, 468 (போலி ஆவணம் தயாரித்தல்), 471 (போலி ஆவணத்தை பயன்படுத்துதல்), 474(பொய்யான ஆவணத்தை உண்மையான ஆவணம் எனக் கூறி ஏமாற்றுதல்) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.