சுனாமி: வீடிழந்தவர்களுக்கு 10,000 அடுக்குமாடி வீடுகள்
சென்னை:
சென்னையில் சுனாமியால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
எண்ணூரில் ஆரம்பித்து திருவான்மியூர் வரை கடலோரங்களில் இருந்த மீனவர் குப்பங்களில் 17,800 வீடுகள் கடல் அலைகளுக்குஇரையாகிவிட்டன.
இதையடுத்து கடலோரத்தில் இருந்து தள்ளியிருக்கும் பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 10,000 வீடுகள் கட்டி இவர்களுக்குவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹால், சமையல் அறை, குளியல்-கழிப்பறை வசதிகளுடன் ஒவ்வொரு வீடும் 225 சதுர அடியில்கட்டப்படவுள்ளது.
இந்தப் பணிக்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்படவுள்ளது என குடிசை மாற்று வாரிய இயக்குனர் அம்புஜ் சர்மா தெரிவித்தார்.
இதே போல நாகப்பட்டிணத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக அம் மாவட்டகலெக்டர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார்.
பிரதமர் நாளை சென்னை வருகை:
இதற்கிடையே நாளை பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருகிறார். முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன்சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கும் சிங், மாலையில் ராஜ்பவனில் இரு மாநில முதல்வர்களையும்சந்திக்கிறார்.
சனிக்கிழமை காலை அவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானை பார்வையிட போர்ட்பிளேர் செல்கிறார்.