சென்னை to
சென்னை:
சுனாமி பாதிப்பு குறித்து விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார்.
காலை கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக சார்பில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் சார்பில் வாசன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மதிமுக சார்பில் எல்.கணேசன்,
பாமக சார்பில் ஜி.கே. மணி, மார்க்சிஸ்ட் சார்பில் வரதராஜன், டி.கே.ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு, எம்.எல்.ஏ.பழனிச்சாமி, பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன், இந்திய தேசிய லீக் சார்பில் பஷீர் அகமது, முஸ்லீம் லீக் சார்பில் காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் உள்பட 30 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தலைவர்கள் மெளன அஞ்சலி:
கூட்டம் தொடங்கியதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 2 நிமிடம் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், சுனாமி பேரலைத் தாக்குதலால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும் சேதம் விளைந்துவிட்டது.கடலோரப் பகுதிகளின் பொருளாதாரமே நிலைகுலைந்து போய்விட்டது.
சுனாமி அலைகளின் கொடூரத் தாக்குதலில் கடலோரக் கவிதைகள் அழிந்து சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டன.எங்கு நோக்கினும் பேரழிவு. உயிர்களைக் குதறிக் கொண்டு, அகப்பட்டதை எல்லாம் அழித்துவிட்டு, எங்கும் நாசம்ஏற்படுத்திச் சென்றுவிட்டது சுனாமி.
சுனாமி தாக்குதலால் தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும், பொருள் இழப்பும் மிக அதிகம்.மீனவர்கள் தங்கள் வீடுகளோடு, படகுகள், வலைகள் என தங்கள் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார்கள். எந்தக் கடல் அவர்களுக்குவாழ்வு வழங்கியதோ, அதே கடல் அதை அவர்களிடம் இருந்து பறித்துவிட்டது.
கேள்விப்படாத சுனாமி:
தமிழக மக்கள் சுனாமியை இதற்கு முன் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. சுனாமி அலைகளின் தாக்குதலுக்கு இத்தனை பேர் மாண்டுபோவார்கள், மறைந்து போவார்கள் என்று நாம் கனவு கூட கண்டதில்லை. சுமார் 8,000 பேர் வரை தமிழகத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.
சுனாமி தாக்குதல் ஏற்பட்டவுடனேயே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புநடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநில அரசு அதிகாரிகளோடு, ராணுவம், கடல்படை, விமானப்படை,கடலோரக் காவல்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான வீரர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில்ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கால வாழ்க்கைக்கான உடனடி நிவாரணம் மட்டுமல்லாது, எதிர்கால வாழ்க்கைக்குத்தேவையான அனைத்து நிவாரணமும் வழங்க உறுதி பூண்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து அனைத்தக் கட்சித் தலைவர்களும் தங்களது யோசனைகள், ஆலோசனைகளைத் தெரிவித்துப்பேசினர்.
ஜெயலலிதா அறிக்கை:
இக் கூட்டம் முடிந்த பின் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் விவரம்:
இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணஉதவியை வழங்கியிருக்கலாம் என்று கூறினர். மக்களுக்கு நிலையான மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிவாரணம்வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். இதுவரை தமிழக அரசு நிவாரணத்துக்காக ரூ. 263 கோடிஒதுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்து, மக்களுக்கு மீண்டும் வாழ்வளிக்க ரூ. 4,800 தேவைப்படுகிறது. இந்த நிதியைமத்திய அரசிடம் இருந்து பெற அனைத்துக் கட்சித் தலைவர்களும் உதவிட வேண்டும்.
எதிர்க் கட்சிகளை அரவணைத்த ஜெ:
சில இடங்களில் மீட்புப் பணியிலும் நிவாரணத்திலும் கால தாமதம் ஏற்பட்டதாக இங்கு பேசிய பல கட்சிப்பெருமக்களும் தெரிவித்தனர். இது நாம் இதுவரை சந்தித்திராத மாபெரும் பேரழிவு. இன்னும் சிறப்பாக, வேகமாகபணிகள் நடந்திருக்கலாம் என்று நினைக்க நிச்சயம் இடமுண்டு.
ஆனால், இயற்கையின் அழிவு சக்திக்கு முன் மனித சக்தியால் அந்த வேகத்துக்கு ஈடு தர முடியாது என்பதைஅனைவரும் அறிவீர்கள். நிவாரணப் பணிகளை முடிந்த அளவு வேகமாகவே அரசு மேற்கொண்டது. இதைசர்வதேச, தேசிய அளவில் பல ஊடகங்களும் பாராட்டியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அதே நேரத்தில் மேலும் வேகம் காட்டியிருக்கலாம் என்ற உங்கள் ஆதங்கத்தையும் உணர்கிறேன்.
சகோதரரர் திருமாவளவன்:
சகோதரர் திருமாவளவன் பேசும்போது பெங்கல் விழாவையே ரத்து செய்துவிடலாம் என்றார். விழாவை அரசுகொண்டாடுவதில்லை. மக்கள் தனிப்பட்ட முறையில் கொண்டாடுகிறார்கள். ஆகவே அந்த விழாவை ரத்து செய்துஅரசு அறிவிப்பு தேவையில்லை. ஆனால், மாநிலத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்க ஒரு நாளை அறிவிக்கலாம்.
தமிழக கடலோரத்தில் தடுப்புச் சுவர் கட்டலாம் என்ற யோசனையை முன் வைத்தார்கள். ஆனால், 1,000 கி.மீ.நீளமுள்ள தமிழக கடலோரத்தில சுவர் கட்ட ரூ. 3,000 கோடி தேவைப்படும். இது குறித்து இன்று பிரதமரைசந்திக்கும்போது பேசுவேன்.
மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள கட்சியினரும் இங்கே இருக்கிறீர்கள். நீங்களும் பிரதமரிடம் பேசுங்கள். மாநிலஅரசுடன் ஒத்துழைக்குமாறு உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
திமுகவுக்கு கோரிக்கை:
நான் ரூ. 4,800 கோடி கேட்டதை சுட்டிக் காட்டி, அது போதாது மேலும் நிதியுதவி கேட்டிருக்கலாம் என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி சொன்னார். நாங்கள் கேட்கத் தயார். ஆனால், நீங்களும் அங்கே பேசி அதற்கானஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் அழைப்பை ஏற்று வந்து நல்ல யோசனைகள் தந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
இவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.