ரூ.1.5 கோடி தங்க கட்டிகள் கொள்ளை
சென்னை:
சென்னை விமான நிலையம் அருகே நகைக் கடை ஊழியரை வழிமறித்து உருட்டுக் கட்டைகளால் தாக்கி ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 17கிலோ தங்கக் கட்டிகளை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிக்க ஜி.எஸ்.டி. சாலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள நகைக் கடையின் ஊழியரான தேவராஜ் என்பவர் கொல்கத்தாவில் 17 கிலோ தங்கக் கட்டிகளைவாங்கிக் கொண்டு விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து ஆட்டோவில் அவர் கெல்லீஸ்கிளம்பினார்.
ஆட்டோ, மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து போலீஸார் போல்உடையணிந்திருந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்தனர்.
தேவராஜை அவர்கள் விசாரிப்பது போல நடித்துள்ளனர். அப்போது ஆட்டோவுக்குப் பின்னால் வந்த ஒரு காரில் இருந்த சிலர் உருட்டுக்கட்டைகளால் தேவராஜுவை சரமாரியாகத் தாக்கினர்.
இதில் காயமடைந்த தேவராஜு மயக்கமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் வைத்திருந்த தங்கக் கட்டிகளை எடுத்துக் கொண்டு அந்தக்கும்பல் தப்பிச் சென்றது.
மக்கள் நடமாட்டமும், 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த ஜி.எஸ்.டி.சாலையில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவராஜுவிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
படுகாயமடைந்த அவர் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மீனம்பாக்கம் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.