ஆஸ்திரேலிய ஓபன்: சானியா 2வது சுற்றுக்கு தகுதி
மெல்போர்ன் :
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இன்று தொடங்கியது. இந்த ஆண்டில் நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும்.
ஆண்கள் பிரிவில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஆண்டி ரோடிக், ஆந்த்ரே அகாசி,இங்கிலாந்தின் டிம் ஹென்மேன், ஸ்பெயினின் கார்லோஸ் மோயா, ஆஸ்திரேலியாவின் ஹெவிட், ரஷ்யாவின் மாரட் சபின் உள்ளிட்டமுன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன் போர்ட், வில்லியம்ஸ் சகோதரிகள், ரஷ்யாவின் மரியா ஷரபோவா,அனஸ்டாசியா மிஸ்கினா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் சானியா மிர்சா இன்று முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சின்டி வாட்சனை எதிர்த்து இவர் விளையாடினார். போட்டியின்இறுதியில் 3-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வாட்சனை வீழ்த்தி, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் 1998ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நிருபமா சஞ்சீவ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.