வீரப்பன் சமாதியில் திடீர் சிலை, பூஜை!
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சமாதியின் மீது புதிதாக 3 அடி சிலை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ அரசுக்கும், காவல்துறைக்கும், வனத்துறைக்கும் பெரும் சவாலாக இருந்து வந்த வீரப்பன் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவனது ஆதரவாளர்களும், ரசிகர்களும் இன்னும் குறையாமல் அப்படியே உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில்தான் வீரப்பன் புதைக்கப்பட்டான். வீரப்பன் புதைக்கப்பட்ட இடம் ஒருசுற்றுலா தலம் போல மாறிவிட்டது. ஏகப்பட்ட பேர் தினசரி அங்கு வந்து வீரப்பன் சமாதியைப் பார்த்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந் நிலையில், வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் திடீரென இரவோடு இரவாக ஒரு சிலை முளைத்துள்ளது. வழக்கமான பச்சை நிற உடை,கடா மீசையுடன் அச்சு அசலாக வீரப்பனைப் போலவே இந்தச் சிலை உள்ளது.
துப்பாக்கியை தலைக்குப் பின்னால் இரு கைகளாலும் பிடித்தபடி வீரப்பன் நிற்பதாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில்நன்மையே செய் என்று எழுதப்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீரப்பன் சிலைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் தேங்காய் உடைத்து பூ, பழம் வைத்து சாமிகும்பிட்டு விட்டும் செல்கின்றனர். சிலை எப்படி வந்தது, யார் வைத்தது என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.
சிலையை தூக்குமாறு வீரப்பனின் உறவினர்களுக்கு மறைமுக எச்சரிக்கைகள் விடுத்து வருகிறது போலீஸ். தூக்காவிட்டால் இரவோடுஇரவாக வந்தது மாதிரியே இரவோடு இரவாக இதை போலீசாரே அப்புறப்படுத்துவர் என்று தெரிகிறது.