மோசடி திருமணம்: இங்கிலாந்தில் 25 இந்தியர்கள் கைது
லண்டன்:
பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்களுடன் பொய்த் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாகக் குடியேறிய 25இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்களுடன் மோசடித் திருமணங்களை செய்து கொண்டு அந் நாட்டில் பலர் குடியேறி வருகின்றனர்.
இதற்காக பல ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். பணத்துக்காக இத் திருமணங்களுக்கு ஒப்புக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் உதவியுடன் பொய்யான திருமணங்களை செய்து கொண்டு, அதைப் பதிவு செய்துவிட்டு, பின்னர்இங்கிலாந்தில் குடியேறியவுடன் இந்தத் தம்பதி பிரிந்து விடும் அல்லது விவாகரத்து செய்து கொள்ளும்.
இந்த மோசடியைத் தடுக்க அவ்வப்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்தவண்ணம் உள்ளனர். பலர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந் நிலையில் மோசடித் திருமணங்களை முன் நின்று நடத்திய ஏஜெண்டுகளான இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த சலீம் முல்லான்(வயது 50), லண்டன் ஈஸ்ட் ஹாமைச் சேர்ந்த இப்ராகிம் உமர்ஜி (66) ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடித் திருமணம் செய்து கொண்டு இந்திய ஆண்கள் இங்கிலாந்தில் குடியேற உதவி 14 பெண்கள் உள்பட மேலும் 23 பேருக்கு 3ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லானின் மனைவி ஜாகராவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கணவருக்குத் துணையாகஇருந்ததோடு, இந்த விவகாரத்தில் வரவு செலவுகளைக் கையாண்டுள்ளார். இவரது கணக்கில் இரு வங்கிகளில் 80,000 பவுண்ட் பணம்இருப்பது தெரிய வந்துள்ளது.
மோசடித் திருமணம் செய்து கொண்டு இந்திய ஆண்கள் இங்கிலாந்துக்குள் நுழைய உதவுவதற்காக ஒரு இந்தியப் பெண் கடந்த 5ஆண்டுகளில் 6 முறை திருமணம் செய்துள்ளதும் நீதிமன்ற விசாரணையில் உறுதியானது.
சிறையில் அடைக்கப்பட்ட 25 பேரில் 14 பேர் பெண்களாவர். இவர்களில் பலர் கணவர் இல்லாத நிலையிலும் குழந்தைகள் பெற்றவர்கள்.
மொத்தத்தில் முல்லா மற்றும் உமர்ஜி கும்பால் 36 சட்ட விரோத திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைஇங்கிலாந்திலும் சில இந்தியாவிலும் நடந்துள்ளன.