மயக்க மருந்து: சித்திரவதைக்கு பின் வீரப்பன் கொலை- அதிரடிப்படை வீரர் மனைவி உதவி
சென்னை
வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் ஒரு அதிரடிப்படை வீரரின் மனைவியின் துணையோடு ஒரு வீட்டுக்கு வரவழைத்து, மோரில்மயக்க மருந்து கலந்து கொடுத்து, பின்னர் சித்திரவதை செய்தே போலீசார் கொன்றுள்ளதாக உண்மை அறியும் குழுவினர் திடுக்கிடும்தகவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டம் பாடி அருகே உள்ளகாட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரப்பன் கும்பலுடன் நடந்த மோதலின்போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகஅதிரடிப் படைத் தலைவர் விஜயக்குமார் கூறினார்.
உண்மையில் வீரப்பன் எப்படி கொல்லப்பட்டான் என்பதை விசாரிக்க 10 தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை பிரதிநிதிகளாகக்கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பாடி கிராமம், அவனது சொந்தஊரான கோபிநத்தம், மனைவி முத்துலட்சுமியின் ஊர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தியது.நூற்றுக்கணக்கானவர்களிடம் அவர்கள் விசாரித்தனர்.
இந்த விசாரணையின் முடிவை குழுவின் தலைவர் பேராசிரியர் ராமசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
போலீஸாருடன் நடந்த மோதலில் வீரப்பனும், கூட்டாளிகளும் கொல்லப்படவில்லை.
போலீஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, வீரப்பனின் நட்பைப் பெற்று அவனது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதைப்பயன்படுத்தி வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் அக்டோபர் 18ம் தேதிக்கு (அன்றுதான் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது) இரண்டு நாட்களுக்கு முன் கோபிநத்தத்தில் உள்ள தனது வீட்டுக்கு அந்தப் பெண்வரவழைத்துள்ளார்.
அவர்களுக்கு சாப்பிட மோர் கொடுத்துள்ளார். அந்த மோரில் மயக்க மருந்து கலந்திருக்க வேண்டும். மோரை சாப்பிட்ட வீரப்பனும்,கூட்டாளிகளும் மயங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை அதிரடிப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பின்னர் வீரப்பன் மற்றும் கூட்டாளிகளுக்கு மயக்கம் தெளிந்தவுடன் அவர்களை அதிரடிப் படையினர் சித்திரவதைப்படுத்தியுள்ளனர். 2நாட்கள் வரை போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு வீரப்பனும் அவனது கும்பலும் கொல்லப்பட்டனர்.
இது என்கவுண்டரே இல்லை, சுத்தமான கொலை. சித்திரவதைப்படுத்தி, கொலை செய்துள்ளனர்.
வீரப்பனின் நெற்றியில் ஏற்பட்ட பெரிய காயம் அவன் சாவதற்கு 10 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.வீரப்பனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவனது உடலில் 3 குண்டுக் காயங்களும், பல வெளிக் காயங்களும் இருந்ததாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வெளிக்காயங்கள் எதனால் ஏற்பட்டன என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. இது எங்களது சந்தேகத்தைஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது என்றார் ராமசாமி.
தொடர்ந்து ராமசாமி கூறுகையில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றநீதிபதி ஒருவரைக் கொண்டு முழுமையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
முத்துலட்சுமி பேட்டி:
பேட்டியின்போது உடனிருந்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில், அதிரடிப்படையினர் என்னை தொடர்ந்து மிரட்டிவருகிறார்கள். என் மீது 17 கைது வாரண்ட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், வீரப்பன் சாவு குறித்து தொடர்ந்து பிரச்சினை கிளப்பினால்வீரப்பனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என்று கூறி வருகிறார்கள். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
என் கணவர் பிடிபட்டிருந்தால் அதிரடிப்படையில் பலர் இறந்திருப்பார்கள். அந்த வேனில் துப்பாக்கிச் சண்டை நடந்த மாதிரிதெரியவில்லை. வேனில் ரத்தக் கறையே இல்லை.
என் கணவர் இறந்த 10 நாட்கள் கழித்து, ராமலிங்கம் என்ற இன்ஸ்பெக்டர் என்னை சந்தித்தார். மேட்டூரில் இருந்த அவர் பின்பு டெல்லிக்குமாற்றப்பட்டார். அவர் என்னிடம், உன் மீது கர்நாடகத்தில் 17 வாரன்ட்டுகள் இருக்கிறது. அதை வைத்து உன்னை கைது செய்து விடுவோம்.
வீரப்பனின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை கேட்காதே. மனித உரிமைக் குழுவிடம் போக வேண்டாம். நீயும் உன் குழந்தைகளும்நல்லா இருக்க வேண்டும் என்றால் நீ அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உனக்கு தமிழக அரசு வீடு தரும் என்று கூறினார்.
அதற்கு, என் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா, இல்லை பிடித்து வைத்து கொல்லப்பட்டாரா என்பது தெரியாமல் நான் விடமாட்டேன்.உங்களது பேரத்துக்கும் அடிபணிய மாட்டேன்
அவர் 3 நாட்கள் கழித்து மீண்டும் வந்து, உன்னையும கொலை செய்ய அதிரடிப்படை திட்டம் தீட்டியுள்ளது. வீரப்பனைக் கொல்வதற்குமுன்பே உன்னை தனியாக அழைத்து கொலை செய்யும்படி என்னிடம் அதிகாரிகள் கூறினர். நான் தான் மறுத்து விட்டேன் என்று கூறினார்.
இதனால் எனக்கு எந்த நேரத்திலும் அதிரடிப்படையினரால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. என்னிடம் இருந்து பறித்த பொருட்களைதிருப்பித் தர மறுக்கின்றனர். எஸ்.பி. அசோக்குமாரிடம் பொருட்களை தருமாறு கேட்டபோது, நீதிமன்றத்துக்குப் போகதே என்றுமிரட்டினார்.
கோவையில் என்னை பிரியா வீட்டில் தங்க வைத்ததே அவர் தான். அந்த வீடு முழுவதும் கேமரா பொருத்தப்பட்டிருந்தது பின்னர்தான்எனக்குத் தெரிந்தது. என்னை எப்படியெல்லாமோ படம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை வைத்து கூட என்னை மிரட்ட அவர்கள்முயற்சிக்கலாம்.
எனது பெயரில் வங்கியில் ரூ. 3 லட்சம் இருக்கிறது. கிரேன் ஒன்றை வாடகைக்கு விட்டிருக்கிறேன். மாதம் ரூ.50,000 வாடகை தரும்கிரேனை போலீஸார் கைப்பற்றி, வெறும் ரூ.8,000 தான் தருகின்றனர். இதுதவிர 3 சவரன் நகை, ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்ஆகியவையும் போலீஸாரிடம் உள்ளது. இவற்றை போலீஸார் திருப்பித் தர வேண்டும் என்றார் முத்துலட்சுமி.