ஆலடி அருணா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீசாரால் அடித்துக் கொலை!
சேரன்மாதேவி:
முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த ரெளடி ஆட்டோ பாஸ்கர்இன்று போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தான்.
அவனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மாதம் 31ம் தேதி அருணாவும் அவரது நண்பர் பொன்ராஜும் நெல்லை அருகே ஆலங்குளத்தில் கொலைசெய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே கிடந்த செல்போனின் உரிமையாளரான வெள்ளைச்சாமி என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
இந் நிலையில் கொயைை நான் தான் செய்தேன் என்று கூறி நெல்லையைச் சேர்ந்த பாலமுருகன் சென்னை நீதிமன்றத்தில்சரணடைந்தான். இவன் போலி குற்றவாளி என்பதும், உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க சரணடையவைக்கப்பட்டவன் என்று தெரியவந்தது.
இதையடுத்து இவனை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ரெளடிஆட்டோ பாஸ்கரும், ஆலங்குளம் கஞ்சா கும்பல் தலைவன் வேல்துரை ஆகியோர் தான் அருணாவைக் கொலை செய்ததாகத்தெரியவந்தது.
இதையடுத்து தனிப் படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்தில் பல இடங்களிலும் ஆட்டோ பாஸ்கரையும் வேல்துரையையும்போலீசார் தேடியலைந்தனர். இதில் பாஸ்கர் நேற்று போலீசாரிடம் சிக்கினான்.
அவனை சேரன்மாதேவி காவல் நிலையத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். அவனிடம் போலீசார் கடுமையாக விசாரணைநடத்தினர்.
இந் நிலையில் இன்று காலை காவல் நிலைய லாக்-அப்பிலேயே ஆட்டோ பாஸ்கர் மர்மமாக இறந்து கிடந்தான். அவனைபோலீசார் அடித்தே கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அவனது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெல்லை சரக டிஐஜி கோபாலகிருஷ்ணன், எஸ்பி அனந்தகுமார் சோமானி ஆகியோர் இது குறித்து சேரன்மாதேவி போலீசாரிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ பாஸ்கரின் மர்மச் சாவு குறித்து விசாரணை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், அவனது உடலில் பல இடங்களில்காயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்தச் சாவையடுத்து இக் காவல் நிலையத்தின் காக்கிகள் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.