குமரி: பிப். 5 முதல் மீண்டும் படகு சவாரி
கன்னியாகுமரி:
சுனாமி அபாயம் முற்றிலும் நீங்கி கடல் இயல்பு நிலைக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்குவருகிற பிப்ரவரி 5ம் தேதி முதல் மீண்டும் படகுப் போக்குவரத்தை தொடங்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்குதலில் கன்னியாகுமரியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குமரி முனையில் உள்ள விவேகானந்தர்பாறையில் மோதிய ராட்சத சுனாமி அலைகள் மக்கள் மனதிலிருந்து இன்னும் அகலவில்லை.
அதேபோல திருவள்ளுவர் சிலையையும் மூடும் அளவுக்கு ராட்சத அலைகள் எழுந்ததும் இன்னும் மனதில் நிழலாடி வருகிறது.
சுனாமிக்குப் பிறகு குமரிக் கடற்கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டது. கடல் கொந்தளிப்பும், படகுகள்சேதமடைந்ததும் இதற்குக் காரணம். தற்போது நிலைமை சுமூகமாகி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கணிசமான எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். இந் நிலையில் சேதமடைந்திருந்த படகுகளைசரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதல் விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரியைத் தொடங்க தமிழக சுற்றுலாத்துறை முடிவுசெய்துள்ளதாக அதன் செயலாளர் ராமதாஸ் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.