குடியரசு தினம்: டெல்லியில் வண்ணமய விழா
டெல்லி:
நாட்டின் 56வது குடியரசு தினம் இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.
டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசியக் கொடியேற்றி வைத்து முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையைஏற்றுக் கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விருந்தினரான பூடான் மன்னர் ஜிக்மே சிங்கே வான்சுக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவே தயாரித்துள்ள அக்னி, பிருத்வி, பிரம்மோஸ், துங்குஸ்கா ரக ஏவுகணைகள், அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள்,விமானியில்லாமல் இயங்கும் விமானங்கள் மற்றும் அதி நவீன டி-90 டாங்கிகள், சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் ஆகியவை இந்தஅணி வகுப்பில் இடம் பெற்றன.
சுனாமி சோகம் காரணமாக ராணுவ அணி வகுப்பில் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக 2 மணி நேரம்10 நிமிடங்கள் நடக்கும் இந்த அணிவகுப்பு 1 மணி 38 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.
தமிழக வாகனம் பங்கேற்கவில்லை:
பல்வேறு மாநிலங்களின் கலாசார அழகை எடுத்துக் காட்டும் வாகனங்கள் அணி வகுப்பில் இடம் பெற்றன. ஆனால், சுனாமியால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட தமிழகம் இந்த அணி வகுப்பில் பங்கேற்கவில்லை.
வழக்கமாக தனது 6 வகை டாங்கிகளை அணி வகுப்பில் இடம் பெறச் செய்யும் ராணுவம், இம் முறை மூன்றை மட்டுமே களத்தில்இறக்கியது.
முன்னதாக நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மன்மோகன் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ராஜ்பாத்தில் 46 குதிரைப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அப்துல் கலாமை பிரதமர் வரவேற்றார்.கலாமுடன் பூடான் மன்னர் மற்றும் இளவரசரும் வந்தனர்.
21 குண்டுகள் முழங்கி முடிக்க, அடுத்த நொடியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் ரக ஹெலிகாப்டரும் எம்ஐ-17 ரகஹெலிகாட்டர்களும் வானில் பறந்தபடி முக்கியஸ்தர்கள் மீது ரோஜா இதழ்களைத் தூவிச் சென்றன.
இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணி வகுப்பு நடந்தது. பின்னர் முப்படைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்கு பரம் வீர்சக்ரா, அசோக் சக்ரா, விக்டோரியா கிராஸ் விருதுகளை ஜனாதிபதி கலாம் வழங்கினார்.
குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் அணி வகுப்பு நடந்தபகுதியில் அரண் போன்ற பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அஸ்ஸாமில் இந்த தினத்தை சீர்குலைக்க உல்பா தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தினர். ஆனால், இதில் யாரும்காயமடையவில்லை.