நான் பனங்காட்டு நரி: ராமதாஸ் ஆவேசம்
திண்டிவனம்:
தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வரம்பு மீறிச் செயல்படுவதாகக் கூறி அவரைக் கண்டித்து பாமக இளைஞர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது தோட்ட வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:
தலைமைத் தேர்தல் ஆணையம் தனது வரம்பை மீறி செயல்படுகிறது. தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தினசரி பல்வேறுஅறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார்.
சிறிய அரசியல் கட்சிகள் சட்டசபைத் தேர்தலில் மட்டும்தான் போட்டியிட வேண்டும், அரசியல்வாதிகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல்போட்டியிடக் கூடாது, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால், வாக்களிக்க விரும்பவில்லை என்ற முத்திரை குத்தஉரிமை என்று அவர் கூறியிருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும்.
தேர்தல் ஆணையர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஓய்வு பெறும் வயதைத் தாண்டியவர்கள்தான். அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறும்வயதை நிர்ணயம் செய்தால், முதலில் தேர்தல் ஆணையர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் பேசக் கூடாது. அப்படி பேச விரும்பினால், டி.என்.சேஷன் போல பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் பேச வேண்டும். கிருஷ்ணமூர்த்தியைக் கண்டித்து பாமக இளைஞர் சங்கம் சார்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதேபோல, முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டசபையில்ஆளுனர் உரையை தமிழில் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதக் கடைசியில் சென்னையில் மகளிர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ மீது ஜெயலலிதா அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வோம்.நாங்கள் பனங்காட்டு நரிகள், சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தனது கடைசி காலத்தில் ஜெயலலிதா ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.
திருமாவளவனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துப் பார்ப்பேன் என்று நான் மதுரை விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில்பேசவில்லை. அங்கு நான் பேசியதை தவறாகப் புந்து கொண்டிருக்கிறார்கள்.
1989ம் ஆண்டு நாங்கள் பாமகவை ஆரம்பித்தபோது, எங்களது கட்சியின் கொள்கைப்படி சுழற்சி முறையில் முதல்வர் பதவி வகிக்கவேண்டும் என்ற விதியை உருவாக்கினோம். ஆனால் நான் மதுரையில் பேசியது, வருகிற சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துப்பேசவில்லை. வரும் தேர்தலில் திமுக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்றார் ராமதாஸ்.