உயர் நீதிமன்றத்திற்கு 12 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு 12 பேரது பெயர்களை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 42 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 26 நீதிபதிகள்மட்டுமே உள்ளனர். இதனால் வழக்குகளை விசாரிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து புதிய நீதிபதிகளை நியமிக்கும் வரை ஓய்வு பெற்ற நீதிபதிகளை அட்ஹாக் முறையில் நியமிக்க வேண்டும் என்று தலைமைநீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தகுதி உள்ள மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பட்டியலை அனுப்பி வைக்கும்படியும்அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதாகவும் அறிவித்தது.
இதையடுத்து 12 பேர் கொண்ட பட்டியலை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் 3மாவட்ட நீதிபதிகள், 9 வழக்கறிஞர்கம் அடங்குவர்.
அவர்கள் விவரம் வருமாறு:
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சம்பத்குமார், மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன், சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிபதி முருகேசன், வழக்கறிஞர்கள் சுதாகரன், புஷ்பா துரைசாமி (சென்னை குடும்ப நல நீதிமன்றம்), ராஜேஸ்வரன், தனபாலன்,மோகன்ராம், பெருமாள், பால் வசந்தகுமார், ஜோதிமணி, பாஷா ஆகியோர்.
இந்தப் பட்டியலை மத்திய சட்டத்துறை ஆய்வு செய்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். உள்துறை அமைச்சகத்தின் ஆய்விற்குப்பின்னர் பிரதமர் அலுவலகம் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.