பத்மபூஷன் விருது வாங்க மறுத்த ரோமிலா தாபர்
டெல்லி:
பத்மபூஷன் விருதை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று சரித்திர ஆராய்ச்சியாளார் ரோமிலா தாபர், குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 25ம் தேதி பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்சரித்திரப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ரோமிலா தாபருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் அந்த விருதை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று ரோமிலா தாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம்அவர் கூறியதாவது:
எனது முடிவு குறித்து அப்துல் கலாமிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில்,
எனக்கு அளிக்கப்பட்ட இந்த பெருமையை வரவேற்கிறேன், அதே நேரத்தில் இந்த விருதை வாங்க முடியாத நிலையில் இருப்பதைவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பே கல்வி நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் தரும்விருதுகளை தவிர்த்து மத்திய அரசு தரும் விருதுகளை ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.
இது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். மத்திய அரசின் விருதுகளை வாங்கும் மற்றவர்களின் கருத்தை இது பிரதிபலிக்காது என்றுஎழுதியிருக்கிறேன்.
மத்திய அரசு வற்புறுத்தினாலும் நான் இந்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. இந்த விருது எனக்கு தரப்படவிருப்பதாக கடந்த 3மாதங்களுக்கு முன்பே எனக்குத் தகவல் வந்தது.
அப்போதே மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு எனது நிலையை எடுத்துக் கூறினேன். அப்படியிருந்தும் இந்தவிருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது என்று கூறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கனாக்சென் தேகாவும் பத்ம விருதை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.