நேபாள அரசு திடீர் டிஸ்மிஸ்: மன்னர் அதிரடி!
காத்மாண்டு:
பிரதமர் ஷேர் பகதூர் துபா தலைமையிலான நேபாள நாட்டு அரசை அந் நாட்டு மன்னர் ஞானேந்திரா திடீரென இன்று கலைத்துவிட்டார்.நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ள அவர் முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தகவலை தொலைக்காட்சி உரை மூலமாக மக்களுக்கு ஞானேந்திரா அறிவித்தார்.
நாட்டில் அமைதியை நிலை நாட்டவும், நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் தவறிவிட்டதால் ஆட்சியைக் கலைப்பதாக மன்னர்தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தான் துபா பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நேபாளத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப்படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இரு தரப்பினருக்கும் பயங்கர உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் நாடு முழுவதும் ஆட் கடத்தலும் அதிகரித்துவிட்டது. ஆயிரக்கணக்கானகுழந்தைகள் கடத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி உள்நாட்டுக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு துபாவுக்கு மன்னர் நெருக்கடி தந்து வந்தார்.ஆனால், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் துபா அரசைக் கவிழ்த்துவிட்ட மன்னர் ஞானேந்திரா, வரும் ஏப்ரலில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டுஜனநாயகம் காக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
துபா அரசு நாட்டின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்டுவிட்டு உட்கட்சி மோதலிலும் அரசியல் போட்டியிலும் ஈடுபட்டு வந்ததாகஞானேந்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டிலும் துபா அரசை ஞானேந்திரா கலைத்தார். ஆனால், பின்னர் அவரையே ஆட்சியமைக்கச் சொன்னார் என்பதுகுறிப்பிடத்தக்கது.