வீரப்பனால் நின்ற திருவிழா: 12 ஆண்டுக்கு பின் மீண்டும்...
மேட்டூர்:
கொளத்தூர் வனப் பகுதி கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவிழா வீரப்பனின் மரணத்தையடுத்துஇப்போது மீண்டும் நடக்கிறது.
பெரியதண்டா காட்டுப் பகுதியில் உள்ளது மூலநடுவு கிராமம். இங்கு ஒசாடாப்பன் என்ற ஒசாடசின்னப்ப சாமி கோவில் உள்ளது.இங்குள்ள மலைப் பகுதி மக்களான குரும்பர் இனத்தினரின் குல தெய்வம் இது.
இந்தப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், இங்கு பொது மக்கள் வந்து செல்ல அதிரடிப்படை தடை விதித்திருந்தது. இந்தக்கோவிலில் வீரப்பன் ஒரு மணியைக் கட்டியிருந்தான். அதில் வீரப்பன் உபயம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் மற்றும் அதிரடிப்படைரின் மிரட்டல்களால் கடந்த 12 ஆண்டுகளாக இந்தக் கோவிலில் திருவிழாவே நடத்தப்படவில்லை.
இப்போது வீரப்பன் போய்ச் சேர்ந்துவிட்டதால், இப் பகுதி மக்களுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குமுன் கைவிடப்பட்ட கோவில் திருவிழாவை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 20,21ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. குறும்பனூர், ஜரத்தல், பெரியதண்டா, நவரை மத்திக்காடு, கண்ணாமூச்சிஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வரவுள்ளனர்.
நேர்த்திக் கடன் செலுத்த 500 ஆடுகள் வரை வெட்டப்படவுள்ளன. இப்போது வீரப்பன் இல்லாவிட்டாலும் கோவிலில் அவன் கட்டிய மணிஅப்படியே உள்ளது.