விஜயேந்திரருக்கு பிப்.10 வரை காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் உட்பட 15 பேரின் நீதிமன்றக் காவலை காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ் வருகிற 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் உட்பட 15 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து அவர்கள் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
அப்போது அவர்களது காவலை வருகிற 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். அதனையடுத்து விஜயேந்திரர்சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
2 வாரத்தில் குற்றப் பத்திரிக்கை:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இன்னும் 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றுகூறப்படுகிறது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், காஞ்சி மட முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன், ரஜினி, மீனாட்சிசுந்தரம், குமார், லட்சுமணன், பூமிநாதன், ஆனந்தகுமார் ஆகிய 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுந்தரேச அய்யர், கதிரவன், ரஜினி, ஆனந்தகுமார், பூமிநாதன் ஆகிய 6 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆனதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 550 பக்கங்களில்குற்றப்பத்திரிக்கை தயாராகி வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
குற்றப்பத்திரிக்கையில் 30 ஆவணங்களும், 45 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாக்குமூலங்களும் இடம்பெறும்.
குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
ரவி காவல் நீட்டிப்பு:
அதே போல சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவி சுப்பிரமணியத்தின் காவலை வரும் 10 ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.