குற்ற பத்திரிக்கை நகல்: போலீஸ் காட்டும் வேகம்- சங்கரமடம் கேள்வி
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை போலீஸார் தயாரிக்கத் தடை கோரி சங்கர மடத்தின் சார்பில்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்,இந்த வழக்கிற்கு பி.ஆர்.சி. 2/2005 என்ற எண் தரப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதிஉத்தமராஜ் கூறினார்.
இந் நிலையில் காஞ்சி மட வழக்கறிஞர் சண்முகம் நீதிபதியிடம் ஒரு முறையீடு செய்தார்.இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் எந்தஆதாரமும் இல்லை. தினசரிப் பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளையே அது முழுமையாக நம்பியுள்ளது என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது இந்த வழக்கில் போலீஸார் காட்டும் வேகத்தைப் பார்த்தால் இன்னும்3 அல்லது 4 நாட்களில் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விடும் என்று தோன்றுகிறது.
பொதுவாக ஒவ்வொரு நகலையும் கவனமாக சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால், இந்தப் பணிக்கு நிறைய நாட்கள்பிடிக்கும். ஆனால் இப்போது போலீஸார் காட்டும் வேகம் அவர்களுக்கே சிக்கலாக முடியும்.
அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம்தான் குற்றப் பத்திரிக்கை நகலை தயார் செய்யும். ஆனால் இந்த வழக்கில் போலீஸார்குற்றப் பத்திரிக்கை நகல் தயார் செய்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.
அதேபோல் விஜயேந்திரரின் நீதிமன்றக் காவல் எதற்காக நீட்டிக்கப்பட்டது என்று கேட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.
விஜயேந்திரருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறஉள்ளது.
குற்றப்பத்திரிக்கை நகல் பெற்ற பின்பு காஞ்சி மடத்திற்கு செல்வதில் ஜெயேந்திரருக்கு எந்தத் தடையும் இல்லை என்றாலும்,அவர் கலவையிலேயே தொடர்ந்து தங்கியிருப்பார்.
ஜெயேந்திரரின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறோம்.