கெளசல்யன் கொலை: புலிகள் துக்கம் அனுசரிப்பு
கொழும்பு:
கெளசல்யன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட போது தமிழ்த் தேசிய கூட்டணி எம்.பி. சந்திர நேருவுக்குக் காவலாக வந்த 2 போலீஸார் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்த்ததாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான கெளசல்யனும், மேலும் 4 புலிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடந்து 19 மணி நேரம் கழித்துத் தான், கெளசல்யனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அனுப்புமாறு புலனருவா நீதிமன்ற நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தத் தாமதத்திற்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கெளசல்யனின் உடலை வாங்குவதற்காக சென்ற விடுதலைப்புலிகள், அவரது உடல் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே தாக்குதலில் இருந்து தப்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
கொலையாளிகள் ஒரு வேனில் எங்களைப் பின் தொடர்ந்து வந்தனர். நமல்கமா என்ற கிராமத்திற்கு அருகே ஆளில்லாத இடம் ஒன்றில் எங்களை முந்திய அந்த வேன் சாலையை வழிமறித்து நின்றது.
அதிலிருந்து இறங்கியவர்கள் இலங்கை ராணுவ வீரர்கள் போன்று உடையணிந்திருந்தனர். எங்களது வேனில் இருந்த அனைவரையும் இறங்கச் சொன்னார்கள். பின்னர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது சந்திர நேருவுக்குக் காவலாக வந்த 2 போலீஸாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றார்.
புலிகள் துக்கம் அனுசரிப்பு:
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளுடன் கிளிநொச்சியில் நடத்தவிருந்த கூட்டத்தை கெளசல்யன் மரணம் காரணமாக புலிகள் ரத்து செய்துள்ளனர்.
மேலும் கிளிநொச்சியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களில் புலிகளின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மட்டகளப்பு மற்றும் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கிறது. யாழ்பாணத்திலும் பல இடங்களில் கருப்புக் கொடி பறக்கவிடப்பட்டிக்கிறது.
கெளசல்யனின் உடல் அடக்கம் எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழீழ நிர்வாகக் குழுத் தலைவர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.