இலங்கையில் அவரச நிலை மேலும் நீட்டிப்பு
கொழும்பு:
இலங்கையில் சுனாமி தாக்கிய பகுதிகளில் அவசர கால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதலின்போது இலங்கையில் சுமார் 31,000 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இந் நிலையில் அவசர நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடந்தது. இதில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டணி எம்.பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 106-20 என்ற வாக்குகள் கணக்கில் அரசு கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இதனையடுத்து சுனாமி பாதித்த பகுதிகளில் மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை நீடிக்கும்.
முன்னதாக மக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரத்னஸ்ரீ விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பேசுகையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே கடலோரப் பகுதிகளில் அவசர நிலை நீடிக்கும் என்றார்.
கெளசல்யன்: அரசு மீது குற்றச்சாட்டு:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் கெளசல்யன் உள்ளிட்டோரை இலங்கை அரசு நயவஞ்சகமாகக் கொன்று விட்டதாக புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் குற்றம் சாட்டினார்.
கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட கெளசல்யனுக்கு மட்டக்களப்பு தண்டியாடி நினைவகத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் தமிழ்ச்செல்வன், புலிகளின் மூத்த தலைவர்கள் பாலகுமார், கரிகாலன், பரராஜசிங்கம், ரமேஷ், தமிழ்நீதி, பெண் புலிகளின் தலைவர் தமிழினி, தமிழ் தேசியக் கூட்டணி எம்.பிக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கெளசல்யனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக் கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் பேசுகையில்,
இலங்கை அரசு கெளசல்யனையும், அவருடன் இருந்தவர்களையும் நம்மிடம் இருந்து பிரித்து விட்டது. பல கனவுகளுடன் கெளசல்யன் மட்டக்களப்புக்கு வந்தார். சுனாமியாலும், சிங்கள பேரினவாத அரசு நடத்திய தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டிருந்த நமது நிலத்தை சீரமைக்கும் திட்டத்துடன் அவர் பணியாற்றினார் என்றார்.
பாலகுமார் பேசுகையில், தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் பலரது உயிரைப் பறித்த சுனாமி, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் மாறவில்லை என்பதை கெளசல்யனின் கொலை காட்டியுள்ளது என்றார்.
ஜி.எல். பெரீஸ் குற்றச்சாட்டு:
இதற்கிடையே, நிவாரண நிதியை புலிகளுக்கு சமமாகப் பகிர்ந்து கொடுக்காததால், பெருமளாவிலான சர்வதேச உதவியை இலங்கை அரசு இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தியவருமான ஜி.எல். பெரீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிலர் கெளசல்யன், முன்னாள் எம்.பி. சந்திரநேரு உள்ளிட்டோரைக் கொன்றுள்ளனர். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அரசியல் படுகொலைகள் நேர்வதைத் தடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய வன்முறைகள் அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிப்பதோடு, இலங்கை அரசு மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவதற்கும் இலங்கை அரசிடம் முறையான திட்டமில்லை. சுனாமி தாக்கி ஒரு மாதம் கடந்த பின்னும், ஏராளமான மக்களுக்கு அரசு நிவாரணப் பொருட்கள் சென்றடையவில்லை.
நிவாரண நிதியை புலிகளுக்கு பகிர்ந்தளிக்காததால், பெருமளவிலான சர்வதேச நிதியை இழக்கும் அபாயத்தில் இலங்கை அரசு உள்ளது.
ஒரு வாரத்திற்கு ரூ.365 மதிப்பில் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்குகிறது. அரசு வழங்கும் அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. தெற்குப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முறையாக நிவாரணப் பொருட்கள் சென்று சேரவில்லை என்றால், வட கிழக்குப் பகுதியில் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசம் என்றார்.