தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ
டெல்லி:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள், அது சாத்தியமும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இருவரும் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனோ, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வந்தே தீரும் என்று முழங்கி வருகிறார். இந்த விஷயத்தில் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை ஏற்கனவே, காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.
இந் நிலையில் இதுகுறித்து டெல்லியில் உள்ள வைகோவிடம் கேட்டபோது, நாங்கள் அதுபோல நினைக்கவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழக மக்கள் ஒருபோதும் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்ததில்லை. அது தமிழகத்திற்கு சரிப்பட்டும் வராது.
இதுவரை கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதில்லை, இனிமேல் ஏற்படவும் போவதில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது, வரும் சட்டசபைத் தேர்தலை மிகுந்த ஒற்றுமையுடன் சந்திப்போம் என்றார் வைகோ.