லஞ்சம் வாங்கினால் குண்டு போடுவோம் !
கும்பகோணம்:
லஞ்சம் வாங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாளை குண்டு வெடிக்கும் என்று கும்பகோணம் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கும்பகோணத்திலுள்ள வணிக வரித்துறை உதவி ஆணையருக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதில், தங்கள் பெயரையும், துணை ஆணையர் பெயரையும் பயன்படுத்தி கீழ்மட்ட அதிகாரிகள் நடத்தும் லஞ்ச வேட்டையை பல முறை கண்டித்தோம்.
ஆனால் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.உங்களைத் திருத்த வேறு வழி தெரியவில்லை.
எனவே உங்களது அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளோம். அது 26-ந் தேதி வெடிக்கும். இவண்: வியாபாரி, தி.க.இ. அணி. லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸார் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் கும்பகோணம் வணிகவரித்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரமணா ஸ்டைல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆட்களா நம்மவர்கள்?