சென்னை மாநகராட்சியில் திமுக பெரும் ரகளை
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டன.
மாநகராட்சியின் 2005-06ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
விவாதம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் எழுந்து, துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது கராத்தே தியாகராஜன் வாசித்த அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், எதிர்க் கட்சியினர் குறித்தும் தெரிவித்த கடுமையான கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
இவர்களுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி-துமளி ஏற்பட்டது.
இந் நிலையில் திமுக கவுன்சிலர்கள் கராத்தே தியாகராஜன் இருக்கைக்கு முன் கூடி அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சில கவுன்சிலர்கள் கராத்தேவை திட்டி கோஷமிட்டனர். இதனால் மேலும் பரபரப்பு அதிகரித்தது.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் கல்யாண சுந்தரம் என்பவரை அவையை விட்டு வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்தது.