வழக்கறிஞர்களை சூடாக்கிய சங்கர மட வழக்கறிஞர்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பார் அசோசியேசனின் தீர்மானத்தை மீறி நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் சண்முகத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயேந்திரர் வழக்கில் அப்ரூவரான காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் உறுப்பினர்களான நசீரா பானு, ரேவதி, சண்முகம், தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நால்வரும் சங்கர மடத்தின் வழக்கறிஞர்களாவர்.
இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து காஞ்சிபுரம் பார் அசோசியேசனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மடத்தின் கணக்குகளைத் திருத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சங்கர மட கணக்காளர் காலடி விஸ்வநாதனின் வழக்கு தொடர்பாக நேற்று ஜெயேந்திரர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அவருடன் சண்முகமும் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார்.
சண்முகத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரே வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜரானதைக் கண்ட பிற வழக்கறிஞர்கள் டென்சனாகினர்.
சண்முகத்துக்கு எதிராக சிலர் கோஷமும் போட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகம் மீது சங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக சங்கர மட கணக்குகளைத் திருத்திய வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஜெயேந்திரர், அது தொடர்பான ஜாமீன் தொகையை நேற்று காஞ்சிபுரம் மதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டினார்.
ஜெயேந்திரர் சார்பில் சங்கர மட பக்தர்கள் முத்துமணி, ஏ.ஆர்.எஸ். கோபாலன் ஆகிய இருவரும் தலா ரூ. 5,000 உத்தரவாதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டினர். பின்னர் தனது கைவிரல் ரேகையை ஜெயேந்திரர் நீதிபதி முன் பதிவு செய்தார்.