தியானம் செய்வது எப்படி?: காங்கிரசாருக்கு கருணாநிதி பாடம்
சென்னை:
காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ், மற்ற கட்சியின் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து சிந்திக்கவே கூடாதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காங்கிரஸாரின் கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற கருத்துக்கு இதுவரை கருணாநிதி நேரடியாக பதில் கூறாமல் இருந்து வந்தார். முரசொலிபத்திரிக்கையில், எழுத்தாளர் சின்னக்குத்தூசி மூலம் சில கருத்துக்களைத் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்.
ஆனால், நிலைமை தலைக்கு மேல் போனதையடுத்து இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறந்தார்.
சென்னையில் யோகாசன நிபுணர் டி.கிருஷ்ணமாச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டகருணாநிதி, தனக்கே உரிய சாதுரியத்தோடு காங்கிரஸாருக்கு பதில் அளித்தார்.
கருணாநிதி பேசியதாவது:
யோகாசனம் செய்யும்போது புத்துணர்ச்சி, எழுச்சி, உற்சாகம், ஊக்கம் கிடைக்கிறது. அத்துடன் தியானப் பயிற்சி செய்வதும் சிறந்தது.எல்லாக் கவனத்தையும் ஒரு புள்ளியில பதிய வைப்பதுதான் தியானம்.
ஏதாவது ஒரு பொருள் அல்லது விஷயத்தை மையமாக வைத்து சிந்தையைச் செலுத்தினால் தியானம் நிறைவேறும்.
நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவன். அண்ணாவின் ஆட்சி வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டே ஒரு புள்ளியைப் பார்த்துக்கொண்டு கவனம் செலுத்தினால், நான் அண்ணா ஆட்சியிலே உறுதியாக இருக்கிறேன் என்று அர்த்தம்.
காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஒரு புள்ளியைப் பார்த்துக் கொண்டிருந்து, நினைத்துக் கொண்டிருக்கும்போதே,கவனத்தை திடீரென்று திசை திருப்பி, கூட்டணி ஆட்சி என்று கருதி விட்டால், நம்முடையை சிந்தையை சிதற விடுவதாகத் தான் அர்த்தம்.
எந்த நிலையை எடுத்தாலும் அந்த நிலையிலேயே நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் தியானம்.
தவறான எண்ணங்கள் கொண்ட ஒரு அமைச்சரின் நண்பனாக இருப்பதை விட கோடிக்கணக்கான எதிரிகளுடன் இருப்பதே சிறந்ததுஎன்கிறார் வள்ளுவர் என்றார் கருணாநிதி.
இதன் மூலம் ஆட்சியில் பங்கு குறித்து நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்பதை காங்கிரஸ் கட்சியினருக்கு கருணாநிதி பதில் தந்துள்ளார்.