அதெல்லாம் தானா வரணும்: ஆர்எம்வீ
சேலம்:
நடிகர்களுக்கு தமிழ் உணர்வு தானாக வர வேண்டும், அதை யாரும் ஊட்டி விட முடியாது என்று எம்.ஜி.ஆர். கழகப் பொதுச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சினிமாவுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வேதனை தருகிறது.
தமிழில்தான் நமது படங்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற உணர்வு, நடிகர்களுக்கு இயல்பாகவே வர வேண்டும். விஞ்ஞானவளர்ச்சிக்கேற்ப மக்களின் மன நிலையும் மாறி விட்டது.
தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக படங்களை ஓட விட மாட்டோம் என்று கூறக்கூடாது. அது நியாயமல்ல. சினிமாத்துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் தமிழை நிலைநிறுத்த தமிழ் விழிப்புணர்வு இயக்கம்தேவை.
மிரட்டுப் போக்கை மேற்கொண்டுத்தான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது பலன் தராது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை, அது தமிழக மக்களுக்கு ஒத்துவராத ஒன்று. இதுதொடர்பான விவாதங்கள் கூடதேவையற்றவை, அவசியமில்லாவை.
அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அனைவரின் மனதிலும் இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனிக்கட்சி ஆட்சியா என்பதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.