வீரப்பன்: உயர் நீதிமன்றத்தில் விஜயக்குமார் மனு
சென்னை :
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து விஜயக்குமார் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது கணவர்வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. அவரை ஏற்கனவே விஷம் வைத்துக்கொன்று விட்டுத்தான் என்கெளண்டர் என்ற பெயரில் அதிரடிப்படையினர் நாடகமாடுகிறார்கள்.
எனவே அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்ற உயர்நீதிமன்றம், தர்மபுரியில் தற்போது வீரப்பன் மரணம் குறித்து நடந்து வரும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பின்னர்விஜயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஜயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்,
இந்த மனு இன்று தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு வழக்கறிஞர் கூறுகையில், ஏற்கனவே வீரப்பன் மரணம் குறித்து தர்மபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.
இந் நிலையில் இன்னொரு வழக்குப் பதிவு செய்ய தேவையில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தனர்.