பரிதி இளம்வழுதி வெளியேற்றம்; திமுக வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.
இன்று சட்டசபை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுமாறு அதிமுக உறுப்பினர் பொன்னேரி சுந்தரத்தை சபாநாயகர் காளிமுத்து அழைத்தார். அப்போது சுந்தரம் திமுகவை கடுமையாக விமர்ச்சித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட திமுக உறுப்பினர் பரிது இளம்வழுதி சபாநாயகரை நோக்கி ஆவேசமாக,
அதிமுகவினர் மரபுகளை மீறினால் அது உங்களது கண்களுக்குத் தெரியாது, அவர்கள் விதிமுறைகளை மீறிப் பேசினால் அதை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்களா என்றார்.
இதனால் கோபமடைந்த சபாநாயகர் காளிமுத்து பரிதியை அமருமாறு கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பரிதி சப்தமாக பேசியதால் அவரை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள், பரிதியை வெளியேற்ற வந்தனர். ஆனால், பரிதி கட்டுப்பட மறுத்தார். இதையடுத்து மிகுந்த சிரமத்திற்கு பின் பரிதியை அவையிலிருந்து காவலர்கள் வெளியேற்றினர்.
இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.