சுனாமி: தமிழக பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லை
டெல்லி:
சுனாமியால் தமிழகத்தின் பொருளாராம் பாதிக்கப்படவில்லை என ஐ.நா, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவைதெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசிடம் இவை கூட்டாக சமர்ப்பித்துள்ள அறிக்கை விவரம்:
இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரம், பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பொருளாதாரமோ,வருவாயோ பாதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு மாநில அரசுகளின் செலவுகள் அதிகரித்திருக்கின்றன.
அதே நேரத்தில் மத்திய அரசு, வெளிநாட்டு அமைப்புகள் ஆகியவை வழங்கும் நிதி, மற்றும் பொருளாதாரச் சந்தையில்திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றைக் கொண்டு இந்தக் கூடுதல் செலவுகளை மாநிலங்கள் சமாளித்துவிடலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சியை சுனாமி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கடலோரப் பகுதிகளின்பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகப் பொருளாதாரம் பெரிய அளவில்பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
தமிழகத்தில் மீனவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோர் தான் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குமாநில அரசின் வருவாயில் பெரும் பங்களிப்பு இல்லை.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் அளிக்க ரூ. 350 கோடியையும், மறுகட்டமைப்புப் பணிகளுக்கு ரூ. 3,772கோடியையும் தமிழகம் செலவிடவுள்ளது.
இது மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 2.0 சதவீதம் ஆகும். இந்தக் கூடுதல் செலவால் மாநிலத்தின் பற்றாக்குறை 3.3சதவீதத்தில் இருந்து 3.9 சதவீதமாக உயரும்.
அதே நேரத்தில் இந்த நிதி முழுவதையும் ஒரே ஆண்டில் தமிழகம் செலவிடப் போவதில்லை. இதனால் மாநில பொருளாதாரத்தில்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.