நாட்டின் மானமே போய்விட்டது: மோடி
அகமதாபாத் - டெல்லி:
தனக்கு விசா மறுக்கப்பட்டதன் மூலம் நாட்டின் மானமே பறிபோய்விட்டது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.இதே கருத்தையே பாஜகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் மதக் கலவரத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி அம் மாநில முதல்வர் மோடிக்கு விசா வழங்க அமெரிக்காமறுத்துள்ளது.
இது குறித்து அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் மோடி கூறுகையில்,
அமெரிக்காவின் இந்தச் செயல் மிக மட்டமானது. இந்தியாவுக்கே இது மானக்கேடு. உலகின் பார்வையில் இந்தியா குறித்துதவறான கருத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது. இந்த விஷயத்தில் தனிப்பட்ட அரசியலை எல்லாம் ஒதுக்கிவிட்டு மத்தியஅரசு தலையிட வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதவுள்ளேன்.
என் மீதோ என் அரசின் மீதோ எந்த நீதிமன்றமும் குற்றம் சாட்டவில்லை. இந் நிலையில் ஒருதலைப்பட்சமாக அமெரிக்காஎடுத்துள்ள இந்த முடிவு இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கும் தன்மானத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயல்.
அமரிக்காவின் முடிவு ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது.
இரண்டு மாதங்களுக்கு முன் விசாவுக்கு நான் விண்ணப்பித்தே போதே மத்திய அரசின் அனுமதியை வாங்கிவிட்டேன். 1998ம்ஆண்டிலிருந்தே என் வசம் அமெரிக்கா செல்ல பிஸினஸ் விசா, டூரிஸ்ட் விசா ஆகியவை உள்ளன. குஜராத் வன்முறை நடந்தது2002ம் ஆண்டில்.
இவற்றை நான் அமெரிக்கா புறப்பட 2 நாட்களே உள்ள நிலையில் திடீரென இப்போது விசாவை ரத்து செய்ய வேண்டியதன்அவசியம் என்ன?. ஏன் முன்பே ரத்து செய்யவில்லை? இந்தியாவின் பெயரைக் கெடுக்கவே இந்தச் செயலை செய்துள்ளார்கள்.
விசா தரும்போது எந்த நாடும் அடுத்த நாட்டின் குடிமகன் மீது தனது சட்டத்தை திணிக்க முடியாது. ஒரு அமெரிக்கர்இந்தியாவுக்கு வரும்போது, அவர் இராக்கில் என்ன செய்தார் என்று விசாரித்துவிட்டா விசா தருவோம்?
காஷ்மீரில் இருந்து இந்துக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிய தீவிரவாதிகளுக்கு உதவியாக இருக்கும் பாகிஸ்தானுடன்நட்புறவை வைத்திருக்கும் அமெரிக்கா, மத விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. வங்கதேசத்தில் மைனாரிட்டிஇந்துக்களை அந் நாடு கொடுமைப்படுத்துகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத் தளபதியை அமெரிக்காவுக்கு நுழைய விடாமல்தடுத்தார்களா?
குஜராத் வன்முறைக்குப் பின் தேர்தல் நடந்து நான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முதல்வர். அப்படியிருக்கஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமெரிக்கா எப்படி இவ்வாறு செயல்படலாம். இந்திய எதிர்ப்பு என்.ஜி.ஓக்களின் மிரட்டலுக்குப்பணிந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார் மோடி.
பாஜக கடும் கோபம்:
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில்,
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை தேவையில்லாதது. இதன்மூலம் இந்தியாவையே அமெரிக்கா கேவலப்படுத்திவிட்டது.இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். அமெரிக்காவிடம் இது தொடர்பாக தீவிரமாக வாதிட வேண்டும்.
முதலில் விசா மறுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
ஒருவருக்கு விசா வழங்குவது அல்லது மறுப்பது அந்தந்த நாட்டின் உரிமை. ஆனால், மோடிக்கு விசா மறுக்கப்பட்டதற்குசொல்லப்பட்டுள்ள காரணம் ஏற்கத்தக்கதல்ல.
அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தி சமூகத்தினரின் அழைப்பில்பேரில் தான் நரேந்திர மோடி அங்கு செல்ல இருந்தார். இந்தவிஷயத்தில் சரிவர விசாரிக்காமலேயே அமெரிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது என்றார் சின்ஹா.
பாஜகவின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், அமெரிக்க அரசின் இச் செயல் இந்தியாவுக்கே மானக்கேடு.இந்தியாவின் மதசார்பின்மை உலகறிந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் செயல் இந்திய மதசார்பின்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டது. எந்த நாட்டிடம் இருந்தும்இந்த விஷயத்தில் சான்றிதழ் பெற வேண்டிய நிலையில் நம் நாடு இல்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பதை விளக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்குத் தொடர்புஇருந்தால் அதைவிட மோசமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது.
அமெரிக்காவின் செயல் ஒரு தவறான முன் மாதிரியாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது என்றார் நக்வி.
கம்யூனிஸ்டுகள் கிண்டல்:
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நிலோத்பால் பாசு கூறுகையில், ஆட்சியில் இருந்தபோதுஅமெரிக்காவுக்காக கொடி பிடித்தவர்கள் தானே இந்த பிஜேபியினர். அமெரிக்காவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையேநல்ல உறவு உள்ளதே.
இதனால் மோடிக்கு விசா கிடைக்காமல் போனது குறித்து யஷ்வந்த் சின்ஹாவுக்கும் ஜஸ்வந்த் சிங்குக்குக்கும் தான் அதிகமானவிவரம் தெரிந்திருக்கும். மோடிக்கு விசா கிடைக்காமல் போனதால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையே மாற்றிக்கொள்ள முடியாது என்றார் பாசு.
மதக் கலவரத்தை நடத்தியதே மோடி தான்:
இந் நிலையில் குஜராத்தில் மதக் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியதால் தான் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கமறுத்துள்ளது என அம் மாநில சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான அர்ஜூன் மோதாவியாகூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 2002ல் குஜராத்தில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு, அதை முன்னின்று நடத்தியதே மோடி தான் என்பதுஉலகுக்கே தெரியும் என்றார்.
நட்வர் சிங் உறுதி:
இதற்கிடையே மோடிக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு விவாதிக்கும் என வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
மோடிக்கு மல்டி எண்ட்ரி விசா அளிக்குமாறு கடந்த பிப்ரவரி 28ம் தேதியே அமெரிக்கத் தூதரகத்திடம் எனது துறை கேட்டுக்கொண்டது. திடீரென இந்த முடிவுக்கு அமெரிக்கா வந்தது குறித்து பேசப்படும் என்றார்.
தூதர் சந்திப்பு:
இந் நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ராமபர்ட் பிளாக்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் ஷாம்சரண்அழைத்துப் பேசினார்.
அப்போது மோடிக்கு விசா வழங்குமாறு அவரிடம் ஷாம்சரண் கோரிக்கை வைத்தார். விசா வழங்குவதில்லை என்ற முடிவைமறுபரிசீலனை செய்யக் கோரினார்.
ஆனால், விசா மறுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கிய பிளாக், உறுதிமொழி ஏதும் தராமல் கிளம்பிச் சென்றார்.