தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாதுகாப்புக்கு துணை ராணுவம்- கிருஷ்ணமூர்த்தி
நெல்லை:
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தும்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார், தேர்தல்பாதுகாப்பில் துணை ராணுவமும் ஈடுபடுத்தப்படும் என மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்த அவர் அங்குள்ள தனது குலதெய்வத்தின் கோவிலில் சுவாமி தரிசனம்செய்தார்.
நெல்லை கோபாலசமுத்திரம் அருகே உள்ள தருவை கிராமம் தான் கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர். இன்று காலை நெல்லை எகஸ்பிரஸ்மூலம் சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த அவர், அங்குள்ள தனது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றார்.
பின்னர் தருவையில் உள்ள தனது குலதெய்வத்தின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
முன்னதாக நெல்லையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் எம்எல்ஏக்கள் மறைவால் இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அங்கு மே,ஜூன் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஏப்ரல் 7ம் தேதிமுடிந்துவிடும். இதையடுத்து ஒரே நாளில் இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து யோசித்து வருகிறோம்.
புதிய வாக்காளர் பட்டியலை இன்டர்நெட்டில் வெளியிட உள்ளோம். தபால் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் மக்கள் பார்வைக்குவைக்க இருக்கிறோம். இதைப் பார்த்து பெயர் விடுபட்டவர்கள் உடனே அதில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தும்போது பிகார், ஹரியாணாவில் பின்பற்றப்பட்டதைப் போல ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருகண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார். தேர்தல் பாதுகாப்பில் துணை ராணுவமும் ஈடுபடுத்தப்படும்.
உள்ளாட்சித் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களையே பயன்படுத்துவது குறித்து அடுத்த மாதம் ஹைதராபாத்தில்ஆலோசனை நடக்கிறது என்றார் கிருஷ்ணமூர்த்தி.