தமிழகம்: கூட்டம் கூட்டமாய் வெளியேறிய கடலோர பகுதி மக்கள்
சென்னை:
இந்தோனேஷியாவில் பூகம்பம் நிகழ்ந்த அடுத்த அரை மணி நேரத்தில், சுனாமி எச்சரிக்கையை உள்துறை அமைச்சகத்திடம்கடலாய்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவசர ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து அவசரகால நிலைமைக்கான குழுவின் கூட்டம் கூடியது.
உடனே கடலோர மாநில அரசுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பப்பட்டது. கடலோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இந்தப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் மெரீனா பீச்சில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 3,000பேரை போலீசார் எழுப்பி அங்கிருந்து அகற்றினர்.
மேலும் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் தங்குவதற்கேற்ப சமூக மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சுமார் 1லட்சம் உணவுப் பொட்டலங்களை தயாரிக்கும் பணியில் வருவாய்த்துறையில் இறங்கினர்.
ஆனால், சுனாமியைப் பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடி நின்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார்மிகுந்த சிரமப்பட்டனர்.
இதே போல நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களிலும் கடலோரத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்கும்வசிப்பவர்களை போலீசார் வெளியேற்றினர்.
வேளாங்கண்ணியிலும் கடற்கரையோர மக்கள் வேறு பகுதிகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்றனர்.வேளாங்கண்ணி கோவில் நிர்வாகிகளும் பாதுகாப்பான இடங்களுக்குக் கிளம்பிச் சென்றனர்.
நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார். சுனாமி பற்றிய தகவல் கிடைத்தவுடன் அவசர அவசரமாகஅவர் நாகப்பட்டினத்துக்குத் திரும்பினார். சுனாமி தாக்குதல் ஏதும் இருந்தால் அதை எதிர்கொள்ள வசதியாக கடலோரமாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்கள் நேற்று இரவிலும் செயல்பட்டன.
நள்ளிரவில் இந்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை என்ற தகவலும் கிடைத்தது.இதையடுத்து மக்கள் மீண்டும் கடற்கரைகளை நோக்கி திரும்பிச் சென்றனர்.