சென்னை, மாமல்லபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்!
சென்னை:
நேற்றிரவு இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தமிழகத்தில் பல இடங்களில் கடல் உள்வாங்கியது.
சென்னை, திருச்செந்தூர், தூத்துக்குடியிலும் கடல் நீர் உள்வாங்குவதும், திரும்புவதுமாக உள்ளது. அலைகளில் வேகம் இல்லை.
சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் நள்ளிரவில் கடல் நீர் நன்றாகவே உள்வாங்கியது. இதனால் பாறைகள், பெரிய கற்கள்வெளியில் எட்டிப் பார்த்தன. சில மணி நேரத்தில் சகஜமான மட்டத்துக்கு நீர் வந்துவிட்டது.
சுமத்ரா தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கிச்சென்றது. அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான பாறைகளும், தரைப்பகுதியும் வெளியில் தெரிந்தன.
கடல் உள்வாங்கியதைக் கண்ட அப் பகுதி மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர்.
கடற்கரை பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக அங்கிருந்துவெளியேற்றப்பட்டனர். அவர்கள் திருக்கழுக்குன்றம் போன்ற உள்பகுதி ஊர்களுக்கு வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதன் பின்னர் தான் இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்டது தெரியவந்தது. மாமல்லபுரம் பகுதி இன்றும் வெறிச்சோடியேகாணப்படுகிறது.
சென்னை, தூத்துக்குடி கடல் பகுதிகளில் அலைகள் வேகமிழந்து காணப்படுகின்றன. மேலும் அலைகளில் அதிக மணலும் கலந்துவருவதாகவும், கடல் நீர் கலங்கியிருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பரில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டபோது திருச்செந்தூரில் கடல் பல மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியதுகுறிப்பிடத்தக்கது.