சுனாமி ஏற்படாதது ஏன்?: விஞ்ஞானிகள் விளக்கம்
லண்டன்:
இந்தோனேஷியாவில் 3வது மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து புவியியல் நிபுணர் எச்சரிக்கைசுமத்ரா தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியிருந்தது.
டிசம்பரில் இதே பகுதியில் உருவான நிலநடுக்கம் 9 ஆக இருந்தது. அப்போது சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா உட்பட பலநாடுகளில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.
சாதாரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டு அடங்கிவிடும். ஆனால் இந்தோனேஷியாவில் டிசம்பர் 26ம்தேதிக்குப் பிறகு தினமும் தொடர் அதிர்வுகள் இருந்து வருகின்றன. இப்பகுதியிலும், அந்தமானிலும் பலமுறை நிலநடுக்கம்தாக்கியது.
இந் நிலையில் தான் கடந்த 3 மாதத்தில் 2வது பெரிய நிலநடுக்கம் நேற்று முன்தினம் இந்தோனேஷியாவை மீண்டும் தாக்கியது.இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதே பகுதியில் 3வது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த புவியியல் நிபுணர் ஜான்மெக்கிலாஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சுமத்ரா தீவுப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்து ஆய்வு நடத்திவரும் இவர், 3வது நிலநடுக்கம் விரைவில் நிகழக்கூடும், அது மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுனாமி உருவாகாதது ஏன்?:
நேற்று முன்தினம் உருவான மாபெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் உருவாகாமல் போனதற்கான காரணம்குறித்த விளக்கத்தை மற்றொரு இங்கிலாந்து நிபுணரான டேவிட் பூத் தந்துள்ளார்.
இம்முறை கடலுக்கடியில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அந்த இடத்தில் பூமித்தட்டுகள் மேல் நோக்கி நகராமல்,கீழ்நோக்கி நகர்ந்ததாலும், பூமியின் சுழற்சிக்கு எதிர் திசையில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சி வெளிப்பட்டதாலும் சுனாமிஅலைகள் தோன்றவில்லை என அவர் கூறியுள்ளார்.
அதகாலை மீண்டும் நிலநடுக்கம்:
இந் நிலையில் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவின் மேற்குகடற்கரைப் பகுதியில் 2.5 டிகிரி வடக்கு மற்றும் 98.5 டிகிரி கிழக்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவுகோலில் இது 5.1 ஆக பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியே இது.