மொரீஷியசில் மன்மோகன் சிங்: 4 ஒப்பந்தங்கள்
போர்ட் லூயிஸ்:
இந்தியா- மொரீஷியஸ் இடையே தீவிரவாதத் தடுப்பு உட்பட 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
பிரதமர் மன்மோகன் சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றார்.அவருடன் அவரது மனைவி குர்ஷரன்கெளர், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
தனி விமானத்தில் மொரீஷியஸ் தலைநகர் வந்த பிரதமருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரிங்கர் மற்றும் உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். பிறகு அந்நாட்டு ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் சிங் ஏற்றுக்கொண்டார்.
இன்று தலைநகர் போர்ட் லூயிஸில் மன்மோகன் சிங் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரிங்கர் ஆகியோர்பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் சர்வதேச தீவிரவாத தடுப்பு, இருநாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்தை அதிகரிப்பது ஆகியவையும் அடங்கும்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை தடுப்பதில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நாடுகளில் மொரீஷியஸும் ஒன்றுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொரீஷியஸில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மொரீஷியஸ் வழியாக கராச்சி, தென் ஆப்பிரிக்கா, ஷாங்காய், பீஜிங் ஆகிய இடங்களுக்கும் விமானங்களைஇயக்க முடிவு செய்யப்பட்டது.