தற்கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி சரண்; ஜாமீனில் விடுதலை
திண்டுக்கல்:
டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் ஜெயலட்சுமியும், ராஜசேகரும் திண்டுக்கல் முதலாவதுகுற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து, பின்னர் ஜாமீன் பெற்றனர்.
இரண்டாவது திருமணம் தொடர்பாக விசாலாட்சிக்கும், ராஜசேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார் விசாலாட்சி.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. ஜெயலட்சுமி, போலீஸார் மீது கொடுத்தபுகார்கள் சூடு பிடித்த சமயத்தில் ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கும் தூசி தட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி, ராஜசேகர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்ய மாஜிஸ்திரேட் சுமதி பிடிவாரண்ட்பிறப்பித்தார். இருவரையும் 9ம் தேதி (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயலட்சுமியும், ராஜசேகரும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி முன் ஜாமீன் கோரினர். அவர்களதுமனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இருவரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து பிடிவாரண்டை ரத்து செய்யகோரலாம் என்றும் அதன் பின்னர் ஜாமீன் பெறலாம் என்றும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதலாவது குற்றவியல் நீதிபதிசுமதி முன்பு இருவரும் அடுத்தடுத்து சரணடைந்தனர். ராஜசேகருக்கு அவரது தங்கையும், தங்கை கணவரும் ஜாமீன்கொடுத்தனர்.
அதேபோல ஜெயலட்சுமிக்கு மதுரையைச் சேர்ந்த சந்திரமோகன், நித்தியானந்தம் ஆகிய இருவர் ஜாமீன் உத்தரவாதம்கொடுத்தனர்.
இதையடுத்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் வருகிற 30ம் தேதி இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த ஜெயலட்சுமி, வெளியே காருக்குள்ளேயே சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்திருந்தார்.அப்போது ஏராளமான பொதுமக்கள் அவரது காரை சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்தனர்.
பின்னர் அவர்களில் சிலர் "ஜெயலட்சுமியக்கா வாழ்க, ஜெயலட்சுமியக்கா வாழ்க என்று கோஷமிட்டதால் லேசாக டென்ஷன் ஆனஜெயலட்சுமி பின்னர் சிரித்துக் கொண்டார்.