கராத்தே தியாகராஜன் பதவி பறிபோகிறது
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களாக பங்கேற்காமல் இருப்பதால் துணை மேயர் மற்றும்கவுன்சிலர் பதவியை பறிகொடுக்கிறார் கராத்தே தியாகராஜன்.
தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் கடந்த நவம்பர் மாதம் முதல் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். சென்னை மாநகராட்சி விதிப்படி தொடர்ந்து 3 மாதங்களாக கூட்டத்தில் கலந்துகொள்ளாதஉறுப்பினர்களின் கவுன்சிலர் பதவி பறிபோய் விடும்.அந்த அடிப்படையில், கராத்தே தியாகராஜன் இன்று தொடங்கும் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால்அவரது உறுப்பினர் பதவி பறிபோய் விடும்.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கராத்தேவின் உறுப்பினர் பதவியைப் பறிக்கும்தீர்மானத்தை கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உறுப்பினர் பதவியை இழந்து விட்டால் தானாகவே துணை மேயர் பதவியையும் கராத்தே இழந்து விடுவார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தடை விதிக்கக் கோரி கராத்தே தியாகராஜன் தாக்கல் செய்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது நினைவிருக்கலாம்.