அதிமுக, மதிமுக பிறந்தது ஏன் ?: காளிமுத்து
சென்னை:
தோற்கப் போகிற கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கொடுத்தால் என்ன. இடிந்த வீட்டில் எருக்கு முளைத்தால் என்ன, ஆமணக்கு முளைத்தால் என்ன என்று கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தாராளமாக தொகுதிகள் கொடுத்துள்ளது குறித்து அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காளிமுத்து தற்போது வீடு திரும்பி விட்டார். சென்னையில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும் வகையில் திட்டம் தயாரித்து அதை அம்மாவிடம் கொடுத்துள்ளேன். அம்மா பச்சைக் கொடி காட்டியவுடன் பிரசாரத்தைத் தொடங்குவேன்.
அதிமுகவுடன், மதிமுக கூட்டணி வைத்தது மிகப் பொருத்தமானது. அண்ணாவின் கொள்கைக் கூட்டணி இது.
குடும்ப அரசியலை எதிர்த்தார் எம்.ஜி.ஆர்., பொதுக்குழுவில் கணக்கு கேட்டார். இதனால் அவரை வெளியேற்றினார்கள். புதிய சகாப்தம் படைத்தார் எம்.ஜி.ஆர்.
அதேபோல வைகோ மீது கொலைப் பழி சுமத்தினார்கள், குடும்ப அரசியலுக்கு எதிராக இருப்பதால் அவரையும் திட்டமிட்டு வெளியேற்றினார்கள். எனவே அதிமுகவும், மதிமுகவும் ஒரே காரணத்தால் பிறந்த கட்சிகள்.
எனவே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருப்பதில் தவறே இல்லை. வைகோ மீது கருணாநிதி கொலைப் பழி சுமத்தினார். அதை விட பொடா கைது பெரிய விஷயமே இல்லை என்பது எனது கருத்து.
வைகோவை வெளியேற்றியதை எதிர்த்து 7 தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். ஏன், அரவாக்குறிச்சி சுடுகாட்டில் வைத்துத்தான் மதிமுகவைத் தொடங்கினார் வைகோ. இவற்றையெல்லாம் அவர் மறந்திருக்க மாட்டார், மறக்கவும் முடியாது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சமமாக தொகுதிகள் ஒதுக்குவது என்பது எம்.ஜி.ஆர். காலம் தொட்டு இருந்து வரும் நடைமுறை. கடந்த தேர்தலில் கூட இரு கட்சிகளுக்கும் தலா 8 தொகுதிகளைக் கொடுத்தார் அம்மா.
ஆனால் இப்போது பாகுபாடு பார்த்து, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி. இது திமுகவின் சித்து விளையாட்டுக்களில் ஒன்று.
திமுக அணி பலவீனமாகி விட்டது. இதன் வெளிப்பாடுதான் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை தாராளமாக ஒதுக்கியிருப்பது என்றார் காளிமுத்து.