ரூ. 216 கோடியில் புது அணை: கேரளா திட்டம்
கூடலூர்:முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே ரூ. 216 கோடி மதிப்பில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநிலநீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் சசி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டது கேரளஅரசு.
இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கேரளாவின் பிடிவாதத்தால் பயன் ஏதும் இல்லை. இந்த நிலையில் பெரியாறு அணைக்கு அருகே புதியஅணை கட்டி தமிழக மக்களின் வயிற்றில் மண்ணைப் போட புதுத் திட்டம் தீட்டியுள்ளது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது. எனவே புது அணை கட்ட வேண்டும் என்று சமீப காலமாக கோரி வருகிறது கேரள அரசு. இந்தநிலையில் சமீபத்தில் புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறுஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் புதிய அணை கட்டும் திட்டம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறை தலைமைப்பொறியாளர் சசி கூறுகையில், ரூ. 216 கோடி செலவில் பெரியாறு அணை அருகே புதிய அணையை கேரள அரசு கட்ட போகிறது. அதற்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு புதிய அணை கட்டினால், அது தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.