நான் கணக்கு கேட்டால்.. ஜெ.வுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:எனது சொத்துக் கணக்கை மட்டுமே ஜெயலலிதா கேட்டுள்ளார். ஆனால் நான் கணக்கு கேட்க ஆரம்பித்தால் என்னென்ன கணக்கு கேட்பேன் தெரியுமா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று 2வது கட்ட இலவச டிவி விநியோகம் நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இலவச டிவி பெட்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், கருணாநிதி குடும்பத்திற்காகத்தான் கட்சி நடத்துகிறார் என்கிறார்கள். ஆமாம், குடும்பம் இருக்கிறது கட்சி நடத்துகிறேன். கருணாநிதி அவருடைய மக்களைத்தான் பார்க்கிறாராம். இங்கே உள்ளவர்கள் எல்லாம் என் மக்கள்தான். தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களும் என் மக்கள்தான். அந்த மக்களுக்காகப் பாடுபடுகிறேன். இல்லாதவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும்.
ஆண்மை இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள். பொதுமக்களுக்காக பாடுபடுகிறேன். அவர்களுக்காக தியாகம் செய்கிறேன். அவர்களுக்காக சாக வேண்டும் அதற்கும் தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டு கஜானாவைக் கொள்ளை அடித்தவர் என்னைப் பார்த்துக் கேட்கிறார். எனக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. கருணாநிதி உடனடியாக அவரது கணக்கைக் காட்ட வேண்டுமாம். எந்தக் கணக்கு?, வயதுக் கணக்கா? எத்தனை பிள்ளைகள் என்ற கணக்கா? எந்தக் கணக்கை காட்ட வேண்டும்? நீ உன்னுடைய கணக்கை காட்டு பார்க்கலாம். உன் வருமான வரிக்கணக்கே இன்னும் முடியவில்லை.
எனது வருமான வரிக் கணக்கு வருமான வரி அலுவலகத்திலே இருக்கிறது, போய்ப் பார்த்துக் கொள். அங்கே போய் எப்படிப் பார்ப்பது என்றால் கார் செலவுக்கு வேண்டுமானால், பெட்ரோல் பணத்தைத் தருகிறேன்.
நான் என்ன அவருடைய வீட்டுக்கு வந்து என் கணக்கை காட்ட வேண்டுமா. நான் யாரை நம்பி அவருடைய வீட்டுக்கு வருவது, வந்தால் என்ன ஆகுமோ, யார் கண்டது, கணக்கை கொண்டு வந்து காட்டு என்கிறார்.
கணக்கில் இன்னது தவறு என்று சொல். சன் டிவியில் எத்தனை பங்குதாரர்கள் என்று கேட்கிறார். சன் டிவிக்கும், எனக்கும் இடையில் உள்ள உறவு குறித்து முன்பே நான் அறிவித்து விட்டேன். சன் டிவியில் இப்போது எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை. என்னுடைய மனைவிக்கு இருந்த தொடர்பும் இல்லை. ஒரு காலத்தில் தொடர்பு இருந்தது. இப்போது இல்லை.
சன் டிவியில் சொத்து எவ்வளவு என்று கேட்கிறார். நான் கேட்க ஆரம்பித்தால், எங்கே போய் நிற்பாய்? நீயாவது சொத்தோடு விட்டு விட்டாய், நான் என்னென்ன கணக்குகளை கேட்பேன் தெரியுமா?
திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, அதை தேர்தல் கதாநாயகன் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்தார். அந்த கதாநாயகனுக்குக் கிடைத்த வெற்றி மேலும் மேலும் தொடரும் என்ற நம்பிக்கையில், உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
இந்தத் திட்டங்ளுக்கெல்லாம் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாயே, ஏது பணம் என்று கேட்கிறார்கள். எங்கள் வீட்டுப் பணம் அல்ல. மக்கள் தந்த பணம்தான். மக்கள் கொடுத்த பணத்தை மக்களுக்கே செலவிடுகிறோம்.
திமுகவை எதிர்த்து, திமுக ஆட்சியை எதிர்த்து ஒரு துறும்பு அசைந்தால் கூட ஆ, தூண் விழுகிறது, தூண் விழுகிறது என்று சிலர் துள்ளிக் குதிக்கிறார்கள். திமுகவை இப்படிப்பட்ட பொய்ப் பிரசாரத்தினால், அழித்து விட முடியும் என்று கருதுகிறீர்களா, இந்த ஆட்சியைக் கவிழ்த்து விட முடியும் என்று கருதுகிறீர்களா, முடியாது.
எவர் நினைத்தாலும், திமுக ஆட்சியை, திமுகவுக்கு, இந்த ஆட்சிக்கு இன்றைக்கு உதவி செய்கின்ற, துணை நிற்கின்ற தோழமைக் கட்சிகளின் உறவை யாராலும் வேரறுக்க முடியாது. திமுக ஆட்சி தொடரும், தொடரும், தொடரும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.