தவறான பேச்சு-பிடித்த அதிமுக: தவித்த அமைச்சர்
சென்னை: சட்டசபையில் வருவாய்த் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தவறான புள்ளி விவரத்தைச் சொல்லப் போக, அதிமுக உறுப்பினர் அதைப் பிடித்துக் கொள்ள, ஆளுங்கட்சி தரப்பு தர்மசங்கடத்தில் மூழ்கியது.
சட்டசைபயில் விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை குறித்த கேள்வியை அதிமுக உறுப்பினர் பாரதி மோகன் எழுப்பிப் பேசினார்.
அவர் பேசுகையில், இந்தத் திட்டத்தால், மிகக் குறைந்த அளவிலான விவசாயிகளே பலன் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பெரியசாமி, இந்தத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற 72 லட்சம் விவசாயக் குடும்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. அதில் 57 லட்சம் குடும்பங்களுக்கு அட்டைகள் கொடுக்கப்பட்டு விட்டன என்றார்.
அப்போது குறுக்கிட்ட பாரதிமோகன், அதிமுக ஆட்சியில், 1.34 கோடி விவசாயக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது 72 லட்சம் குடும்பங்களே இத்திட்டத்தின் பயனாளிகள் என அமைச்சர் கூறுகிறார் என்றார்.
பின்னர் எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, பட்ஜெட் உரையில், அரசே, 1.15 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என கூறியுள்ளது. அப்படி இருக்கையில் அமைச்சர் கூறும் எண்ணிக்கை முரண்பாடாக உள்ளதே என்று கூறி பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்ததை வாசித்தும் காட்டினார்.
தவறான புள்ளி விவரத்தைக் கூறி விட்டதை உணர்ந்த அமைச்சர் பெரியசாமி, பன்னீர் செல்வத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
இருந்தாலும் அதிமுக உறுப்பினர்கள் விடவில்லை. அமைச்சர் சரியான பதிலைச் சொல்ல வேண்டும் என்று கூறி அமைச்சரைப் பார்த்து பதில் சொல்லுங்கள் என்று கூறியபடி இருந்தனர்.
பெரியசாமியின் தவறான புள்ளி விவரத்தால் ஆளுங்கட்சி தரப்பு தர்மசங்கடத்தில் ஆழ்ந்தது. அப்போது எழுந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உண்மையில் 1.15 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 52 லட்சம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 72 லட்சம் குடும்பங்களுக்கு அட்டைகள் தயாராக உள்ளன என்று கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பெரியசாமிக்கு நிம்மதியைக் கொடுத்தார்.