ஜட்டி ரவி சமூக நீதி டிஐஜி ஆனார்!
சென்னை:நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து, குற்றாலத்தில் குடித்து விட்டு, ஜட்டியுடன் பொதுமக்களிடம் ரகளை செய்து, பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி ரவி, சமூக நீதி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ரவி. குற்றாலத்தில் அவர் குடித்து விட்டு அருவிக்குக் குளிக்க வந்தவர்களிடம் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தடுக்க வந்த போலீஸாரையும் அவர் தாக்கினார்.
இதையடுத்து ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சமூக நீதி டிஐஜி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவர் பணியில் சேரவுள்ளார்.
இதேபோல, கூடுதல் டிஜிபிக்கள் ராஜேந்திரன், நடராஜன் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் சென்னை நகர கூடுதல் காவல் ஆணையராக இருந்தவர். நடராஜன் ஆணையராக இருந்தவர்.
தற்போது டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரன், பதவி உயர்வுக்குப் பின்னர் சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தற்பாது மின்சார வாரிய விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் டிஜிபி ஆக உள்ள நடராஜன், அதே பிரிவில் டிஜிபி ஆக செயல்படுவார்.
சிபிசிஐடி ஐஜி சேகர், சிறைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆக உள்ள பாலச்சந்திரன், காவல் பயிற்சி பிரிவு கூடுதல் டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
காவல் பயிற்சிப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராமானுஜம், டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.