ஆகஸ்ட் வரை டைம் கேட்கும் பிரேமலதா விஜயகாந்த்
ென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான சென்னை ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு விஜயகாந்த்தின் மனைவியும், நிலத்தின் உரிமையாளருமான பிரேமலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோயம்பேடு பகுதியில் அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது. இதற்காக, விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் உள்ளிட்ட சில கட்டடங்களைக் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னைன உயர்நீதிமன்றத்தில் பிரேமலதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நிலத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கல்யாண நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அதுவரை மண்டபத்தை ஒப்படைக்க அவகாசம் தரவும், மண்டபத்தை இடிக்கத் தடை கோரியும் கோரப்பட்டிருந்தது.
மண்டபத்தை இடிக்க தடை விதிக்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத் அணுகுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி இன்று பிரேமலதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்யாண நிகழ்ச்சிகள் பதிவாகியுள்ளதால் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மண்டபத்தை ஒப்படைக்க அவகாசம் தர வேண்டும் என பிரேமலதா கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.