கார் மீது டைவ் அடித்த பஸ்-2 பேர் பலி
காஞ்சீபுரம்:காஞ்சிபுரம் அருகே சென்னையை நோக்கி சென்ற கார் மீது, சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, பல்டி அடித்து விழுந்து நசுக்கியதில், காரில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாதிபர் எஸ்கே.பஜாஜ். இவரது தாயார் ரோஸ்மி தேவி பஜாஜ் (60). இவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து நேற்று மாலை டாக்சி மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ரோஸ்மி தேவி, பஜாஜ், அவரது மனைவி நர்மதா ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சீபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்து. இது இருவழிப் பாதையாகும். மறுவழியில், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.
வந்து கொண்டிருந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அப்படிய தலைகுப்புற பல்டி அடித்து, மறு பாதையில் பஜாஜ் குடும்பத்தினர் பயணித்த கார் மீது கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் பன்னீர் செல்வம் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ரோஸ்மி, பஜாஜ், நர்மதா ஆகியோர் படு காயமைடந்தனர். அதேபோல, பஸ்சில் பயணம் செய்த 19 பயணிகளும் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரோஸ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.