நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி:சென்னை பல்கலை.க்கு ரூ.100 கோடி!
டெல்லி: நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி படிப்புக்காக, சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில்,
சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் 150ம் ஆண்டை கொண்டாடுகின்றன. இதையொட்டி இந்த பல்கலைக்கழகங்களில் நேனோ தொழில்நுட்பம், நேனோ அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும், தேவையான மையங்கள் நிறுவவும் ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும் இந்த ஆராய்ச்சி பணித்திட்டங்கள் 2010-11ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நேனோ தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் உருவாக்கப்படுவர்.
குவைத்துக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அந்நாட்டுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தின்படி கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். இக்குழு வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும். மேலும் தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் காண்டிராக்ட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றம் செய்வதை தடுக்கும்.
குவைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வராத தொழிலாளர்களின் நலன்களை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கும்.
நாட்டில் பொருளாதார குற்றங்களை தடுக்க, சந்தேகத்திடமான பண பரிமாற்றங்களை கண்காணிக்கவும், இது தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள சக அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் பொருளாதார புலானாய்வு பிரிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றார் முன்ஷி.