புலிகளின் வான்வெளி தாக்குதல்-தமிழ் இனத்துக்கு பெருமை: வைகோ
ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது.
மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்கள். அவற்றை தூசி போல நினைத்து மதிமுகவினர் லட்சியத்துக்காக கொள்கைக்காக விரட்டினார்கள்.
மதிமுக என்று கப்பல் கவிழாது. நீருக்குள் சென்றாலும் நீர்மூழ்கி கப்பலாக வெளியே வரும்.
இதுவரை இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்களை கொல்லும் அவலம் நின்றபாடாக இல்லை. இந்திய கடற்படை என்ன செய்கிறது. மீனவர்களை காக்க என்ன நடவடிக்கை எடுத்தது.
இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை ரகசிய ஒப்பந்தம் செய்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறதா என்று எழுத்து பூர்வமாக பிரதமரிடம் கேட்டேன். இந்த பிரச்சனையில் திமுக அரசின் நிலை என்ன என்பது புரியவில்லை.
இந்திய இலங்கை கூட்டு ரோந்து என்று கூறிய கருணாநிதி இதற்கு கடும் கண்டனம் எழுந்ததும் தனது நிலையை மாற்றிக் கொண்டார். இலங்கை கடற் படையுடன் இந்திய கடற்படை கள்ளத்தனமாக ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.
கலைஞர் இதை ஆதரித்தது, தமிழக மீனவர்களுக்கு அவர் செய்த துரோகம். இதை ஆரம்பம் முதலே நான் எதிர்த்து வருகிறேன்.
மீனவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது. கேரளாவில் புதிய அணை கட்டினால் தென் மாவட்டங்கள் நரகமாகி விடும். தமிழகத்திற்கு எதிரான திமுக அரசு விரைவில் கவிழும் என்றார்.
முன்னதாக விடுதலைப்புலிகளுக்கு பண உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக அமைப்புச் செயலாளர் சீமாபஷிரை வைகோ சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ,
சீமாபஷீர் சட்டவிரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடாதவர். இவர் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. அரசியல் வஞ்சம் தீர்ப்பதற்காக மைனாரிட்டி பாசிச திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. மதிமுகவினரை முடக்க முதல்வர் அஸ்திரம் ஏவி விட்டுள்ளார்.
இருவரை வைத்து மதிமுக உடைக்க முதல்வர் போட்ட திட்டம் தூள் தூளானது. இப்போது இந்த பொய் வழக்கு மூலம் அடக்குமுறை ஏவப்பட்டிருப்பதை உறுதியாக எதிர்கொண்டு வெல்வோம்.
இந்திய இலங்கை கடற்படை கூட்டு ரோந்து யோசனையை மகிந்தா ராஜபக்ஷே கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததும் முதல்வர் கருணாநிதி எலி தவளை கதை சொல்லி விளக்கம் கூறுகிறார்.
ராஜபக்ஷே ஊதுககுழலாக தமிழக முதல்வர் கருணாநிதி செயல்படுகிறார். இலங்கை கடற்படை ஊடுருவலை இந்திய கடற்படை தடுக்க வேண்டும். தமிழர்களின் விரோதியான இலங்கை அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக உதவுகிறது.
விடுதலைப்புலிகளின் முதன்முறையாக வான்வெளி தாக்குதல் நடத்தியது தமிழ் இனத்துக்கு பெருமை தேடிதந்த விஷயம். யுத்தம் வரும். விடுதலைப்புலிகள் வெல்வர். தமிழ் ஈழம் வரும் என்றார்.