உல்மர் கொலையில் தாவூத் இப்ராகிம் தொடர்பு?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் கொலையில், தாவூத் இப்ராகிமுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பாப் உல்மர் கொலை தொடர்பாக இன்னும் தெளிவான விளக்கத்தை ஜமைக்கா போலீஸார் தெரிவிக்கவில்லை. பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சூதாட்டமே உல்மரின் கொலைக்கு முக்கிய காரணம் என தற்போது வலுவாக நம்பப்படுகிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கும், உல்மருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
அந்த சூதாட்டக்காரர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவர் தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வந்திருந்ததாகவும் லண்டனிலிருந்து வரும் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, சூதாட்ட புகாரில் சிக்கி இந்திய சிறையில் இருக்கும், தாவூதின் முன்னாள் கூட்டாளியான பப்லு ஸ்ரீவஸ்தவாவும், தாவூத்தான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் சூதாட்ட புரோக்கர்களுடன் ஜாமைக்கா சென்றிருந்ததாக கூறப்படுவதால் இந்த கொலையில் தாவூத் இப்ராகிமுக்கு நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த கோணத்தில் ஜாமைக்கா போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.